Live: CDS ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிப் பயணம்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஜெனரல் பிபின் ராவத் உடல் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கின. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2021, 10:18 AM IST
    ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதி பயணம்
Live Blog

நேற்றுக் காலை டெல்லியில் இருந்து, நீலகிரி மலையில் அமைந்திருக்கும் வெலிங்கடனுக்கு முப்படைகளின் தலைமைத் தளபதியாக பயணம் மேற்கொண்டார் பிபின் ராவத். இன்று அவரது பூதவுடல் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கின. டெல்லி கொண்டுச் செல்லப்படும் உடல்களுக்கு நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் அவரது மனைவி உட்பட விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தீவிர காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

 

9 December, 2021

  • 20:00 PM

    முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டெல்லி சென்றடைந்தது

    முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேரின் உடல்கள், கோயம்புத்தூரில் இருந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லி பாலம் விமான நிலையத்தில் ராணுவ முறைப்படி மரியாதையுடன் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது.

    ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அனைவருக்கும் மரியாதை செலுத்துவதற்காக 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர், பாலம் விமான நிலையத்திற்கு வரவிருக்கின்றனர்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

  • 18:15 PM

    ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு

    இந்த விபத்து குறித்த விசாரணை முழு வீச்சுடன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக குன்னூர் காவல் நிலையத்தில் பிரிவு 174-ன் கீழ் (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  • 16:15 PM

    13 பேரின் உடல்களுடன் டெல்லி புறப்பட்டது சி-130 ஜே விமானம்

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த 13 பேரின் உடல்களை சுமந்து கொண்டு, சூலூர் விமானபப்டை விமான தளத்தில் இருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் டெல்லி புறப்பட்டது. 

  • 15:15 PM

    ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

    ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்கள் சூலுருக்கு வந்து சேர்ந்தன. இங்கிருந்து அனைத்து உடல்களும் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்ட பிறகே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். உறவினர்கள் அடையாளம் காட்டினாலும், அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட பின்னரே உடல்கள் ஒப்படைக்கப்படும் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

  • 14:15 PM

    உடல்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஒன்றுக்கு விபத்து

    சூலூரை நோக்கி கொண்டு செல்லப்படும்  ராணுவ வீரர்களின் உடல்களை சுமந்து சென்ற அமரர் ஊர்திகளில் ஒன்று முன்செர்ன்ற வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. உடல் வேறு வாகனத்திற்கு மாற்றி எடுத்துச் செல்லப்படுகிறது.

    சூலூர் விமானப்படை தளத்தின் முன் காத்திருக்கும் மக்கள் 

    இன்னும் சற்று நேரத்தில் ராணுவ வீரர்களின் உடல்கள் தமிழக அரசின் அமரர் ஊர்தியில் 13 பேரின் உடல்கள் சாலை மார்க்கமாக குன்னூரில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரவுள்ளது. ராணுவ வீரர்களின் உடல்களை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் விமானப்படை தளத்தின் முன் குவிந்துள்ளதால், பெருமளவிலான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  

  • 13:30 PM

    பாதுகாப்புக்கு சென்ற போலீசாரின் வாகனம் விபத்து

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கோவைக்கு கொண்டு செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல்துறையினரின் வாகனங்களில் ஒன்று விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    தற்போது 13 பேரின் உடல்களை எடுத்துச் செல்லும் வாகனங்களின் அணி வரிசை மேட்டுப்பாளையத்தை அடைந்துவிட்டது.

     

  • 13:15 PM

    ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு

    முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக வெலிங்க்டன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    இயற்கைக்கு மாறான மரணம் என்பதற்கான 174 சட்டப்பிரிவின் கீழ், வெலிங்க்டன் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனது. 

  • 13:00 PM

    முப்படை தலைமைத் தளபதியின் உடல் கோவைக்கு கொண்டு செல்லப்படுகிறது

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள், சாலை மார்க்கமாக ராணுவ வாகனங்களில் கோவை சூலூர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.  செல்லும் வழியெல்லாம் மக்கள் கூடி நின்றி மல்ர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சூலூரில் இருந்து விமானம் மூலம் உடல்கள் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும். ஏற்பாடுகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

     

  • 12:15 PM

    முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கும் தமிழக முதலமைச்சர் அஞ்சலி

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்,  தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என பலரும் அஞ்சலி செலுதினார்கள். 

    கடல் படை தளபதி  அட்மிரல் ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுதரி, ராணுவ தளபதி நரவின ஆகிய முப்படை தளபதிகளும் இறுதி மரியாதை செலுத்தினார்கள். தனித்தனி ராணுவ வாகனங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை சூலூர் வரை கொண்டு சென்று, சூலூரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்கின்றனர்.

  • 11:45 AM

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவையில் இரங்கல் 

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்களுக்கு மக்களவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.

  • 10:45 AM

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெலிங்டனில் ராணுவ மரியாதை 

    குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது.  

  • 10:30 AM

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டது

    சூலூர் விமான படை தளத்திலிருந்து வந்த  அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நேற்றிரவு ஆய்வு செய்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் 

    கறுப்பு பெட்டி கிடைத்துவிட்டதாகவும் அது ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

     

  • 10:15 AM

    இறுதிப் பயணத்திற்கு தயாராகிறார் இரும்பு மனிதர் பிபின் ராவத்

    வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல ராணுவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர். இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்கள் அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

Trending News