'நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது...' கட் அண்ட் ரைட்டாக சொன்ன உச்ச நீதிமன்றம் - காரணம் என்ன?

NEET Case: நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்றும் தேசிய தேர்வு மையம் அதன் குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்திச் செய்துகொள்ள வேண்டும் எனவும் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 2, 2024, 12:40 PM IST
  • 7 பேர் கொண்ட கமிட்டி செப். 30-க்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
  • பாட்னா, ஹசாரிபாக் நகரங்களில் மட்டும் நிட் வினாத்தாள் கசிந்துள்ளது - உச்ச நீதிமன்றம்
  • 13 லட்சத்து 15 ஆயிரத்து 853 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
'நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது...' கட் அண்ட் ரைட்டாக சொன்ன உச்ச நீதிமன்றம் - காரணம் என்ன? title=

Supreme Court Verdict On NEET Case: இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைத்துத் தேர்வான நீட், தேசிய அளவில் அதிகமானோரால் எழுதப்படும் தேர்வாகும். அரசு பள்ளி மாணவர்களுக்கும், பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கும் நீட் தேர்வு அநீதி விழைவிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்து, மத்திய அரசிடம் நீட் விலக்கு கோரிக்கையை கேட்டு வந்தாலும், தொடர்ந்து தமிழ்நாட்டு மாணவர்களும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். 

அந்த வகையில், 2024-2025 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் நாடு முழுவதும் தேர்வு எழுதிய நிலையில், அதில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 853 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வு முடிவுகள் ஒருபுறம் இருக்க, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் நீட் தேர்வுக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் புயலை கிளப்பியது. தொடர்ந்து, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல முறைகேடுகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டு இருந்தது.

நீட் வழக்கு : இன்று முக்கிய தீர்ப்பு

நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், அந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமயிலான மூன்று பேர் தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்நிலையில், நீட் வினாத்தாள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தீர்ப்பு வழங்கும்போது சந்திரசூட் வாய்மொழியாக பேசியதாவது, "நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரந்தளவில் இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை நிலவும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றை வருங்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். தேசிய தேர்வு முகமையின் குறைபாடுகளால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது" என்றார்.

மேலும் படிக்க | பட்டியல், பழங்குடியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை - உச்சநீதிமன்றம்

செப். 30ஆம் தேதிக்குள் அறிக்கை

தொடர்ந்து அந்த தீர்ப்பில், சைபர் பாதுகாப்பில் இருக்கும் பிரச்னைகளை தொழில்நுட்ப ரீதியில் கண்டறிந்து, இதுபோல் வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், தேசிய தேர்வு முகமையில் அமைப்பு ரீதியிலான செயல்பாட்டில் இருக்கும் குறைப்பாடுகள் அனைத்தையும் தாங்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக கூறிய நீதிபதிகள், மாணவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றது. 

மேலும், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 7 பேர் கொண்ட மத்திய அரசின் கமிட்டிக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி நீட் தேர்வின் ஒட்டுமொத்த செயல்முறையை ஆராயந்து, தேர்வை எவ்வித பிரச்னையும் சீராக நடத்த செய்ய வேண்டிய மாற்றங்களை பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் செப். 30ஆம் தேதிக்குள் இந்த குழு தனது அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.

பரந்த அளவில் கசியவில்லை

இந்த குழு சமர்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளை, கல்வி அமைச்சகம் உடனடியாக பரிசீலித்து அவற்றை இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்தியாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தரமான முறையில் தேர்வு நடந்தவும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மையங்கள் ஒதுக்கும் நடைமுறைகளிலும், தேர்வு எழுத வருபவர்களை அடையாளம் காணும் நடைமுறையிலும், தேர்வு மையங்களை சிசிடிவி மூலம் முழுமையாக கண்காணிக்க, நிலையான இயக்க நடைமுறை அல்லது நெறிமுறையை அமைப்பது குறித்து கமிட்டி ஆலோசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தனது பரிந்துரையையும் தெரிவித்திருக்கிறது. 

தேர்வின் வினாத்தாள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் தகுந்த நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பாட்னாவிலும், ஹசாரிபாக்கிலும் மட்டும்தான் வினாத்தாள் கசிந்த சம்பவம் நடந்திருக்கிறது, பரந்த அளவில் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், ஆக. 1ஆம் தேதியான நேற்று முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேர்வெழுதிய 4 பேர், ஜூனியர் பொறியாளர் ஒருவர் உள்பட 13 பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்... இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் - முழு விளக்கம் இதோ!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News