)
Rajinikanth After Coolie And Jailer 2 Movies : இந்திய திரை உலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர், நடிகர் ரஜினிகாந்த். இவர், தனது 70களில் இருக்கும் போதிலும் தளராத இளமை மனதோடு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்சமயத்தில் நடித்து வரும் படங்கள் குறித்தும், இதன்பிறகு நடிக்க இருக்கும் ஒரு படம் குறித்தும் இங்கு பார்ப்போம்.
ரஜினிகாந்த் நடித்த படம் 2 படங்கள்:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் உடன் இணைந்து தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முக்கிய நடிகர்களாக விளங்கும் நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் ரஜினிகாந்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாக இருக்கிறது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் கேமியோ கதாப்பாத்திரங்களில் சிவராஜ்குமார், மோகன் லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், ரஜினியின் சமீப கால ஹிட் படங்களுள் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. நெல்சன்தான் இந்த படத்தையும் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஹுக்கும் என்று பெயரிட இருப்பதாக கூறப்படுகிறது. கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்த பிறகு, ரஜினிகாந்த் ஒரு பிரபல இயக்குநருடன் இணைய இருக்கிறார்.
ரஜினியின் அடுத்த படம்..
ரஜினிகாந்தை வைத்து 1991ஆம் ஆண்டில் தளபதி படத்தை இயக்கியவர், மணிரத்னம். தற்போது, கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ரஜினியின் பிறந்தநாளையொட்டி, டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி திரைப்படம், ரஜினிகாந்த் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்த படங்களுள் ஒன்று. இந்த படத்தில் அவர் சூர்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். தாய் பாசம் கிடைக்காத இளைஞன், காதலில் விழுந்து-தோற்றுப்போன இதயம், நெருங்கிய நட்பை தாங்கும் வலி என ரஜினியி் கேரக்டருக்கு விதவிதமான வண்ணங்களை தீட்டியிருப்பார், மணிரத்னம். அப்போதே, இந்த படம் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
ரஜினி-சத்யராஜ்..
மணிரத்னம்-ரஜினி மட்டுமல்ல, கூலி படம் மூலம் இன்னொரு கூட்டணியும் பல ஆண்டுகளுக்கு பின்பு இணைய இருக்கிறது. பல படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்த சத்யராஜ், கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கூலி படம் மூலம் இணைந்திருக்கின்றனர். இந்த கூட்டணியையும் திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ