ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்… உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்!!

இதிகாசங்களை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்? கடினமான சூழல்களிலும் தர்மத்தை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமரின் அவதாரம் என்பது புரியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 01:20 PM IST
  • இந்து புராண தர்ம கிரந்தங்கள் மற்றும் வரலாற்றுப் படைப்புகளில், அயோத்தி நகரம் சந்தேகத்திற்கு இடமின்றி ராமரின் பிறப்பிடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ராமர் காமம், கோவம் மற்றும் பேராசை ஆகியவற்றை மிகப்பெரிய எதிரிகளாகக் கருதினார்.
  • ராமரின் வாழ்க்கையில் அன்பும் பரிவும் பக்குவமும் நிறைந்துள்ளன.
ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்… உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்!! title=

அயோத்தியில் நாளை ராமர் கோயிலுக்கான பூமி பூஜை (Bhoomi Poojan) நடக்கவுள்ளது. பல உள்ளங்களின் பல நாள் கனவு நிறைவடையப் போகின்றது.

முதலில் ராமர் பிறப்பிடம் குறித்து நீண்ட நாட்களுக்கு சர்ச்சை இருந்தது.  490 ஆண்டுகள் பழமையான சர்ச்சை நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட்ட பின்னர் இப்போது இந்த கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ளன.

ராமரின் பிறந்த இடத்தில் அவருக்கான கோயிலைக் கட்ட ஏன் இத்தனை பிரச்சனை? இதிகாசங்களை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்? கடினமான சூழல்களிலும் தர்மத்தை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமரின் அவதாரம் என்பது புரியும். அவர் வாழ்ந்த போதும் அவருக்கு பல சோதனைகள் வந்தன. அனைத்தும் நன்மையிலேயே முடிந்தன. இப்போதும் அவர் கோயிலுக்கு பல சோதனைகள் வந்தன. இப்போதும் அனைத்தும் நன்மையிலேயே முடியும்.

உண்மையில் ராமரின் கதாபாத்திரம் முழு மனித இனத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ராமரின் தன்மை சனாதன கலாச்சாரத்தின் ஒரு உறுதியான பகுதியாக இருந்துள்ளது. ராமரைப் பிரித்து சனாதன தர்மத்தைப் பார்கக் முடியாது.

இந்து புராண தர்ம கிரந்தங்கள் மற்றும் வரலாற்றுப் படைப்புகளில், அயோத்தி நகரம் (Ayodhya) சந்தேகத்திற்கு இடமின்றி ராமரின் பிறப்பிடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு அற்புதமான ஸ்லோகத்தில், ராமர் அவதாரம் எடுத்த மகிமையை கோஸ்வாமி துளசி தாசர் விவரித்துள்ளார். சித்திரை மாதத்தில், வளர்பிறையில், நவமி திதியில், மிகவும் நல்ல முகூர்த்த நேரத்தில், அழகான உருவத்தோடு ராமர் பிறந்தார்.  அது மதிய நேரமாக இருந்தது. அப்போது அதிக குளிரும் இல்லை, அதிக வெயிலும் இல்லை. அதாவது அது ஒரு அனுகூலமான நேரமாக, புனித காலமாக, அனைத்து மக்களுக்கும் அமைதியைத் தரும் நேரமாக இருந்தது. இப்படிபட்ட ஒரு நாளில்தான் ராமர், அயோத்திய மன்னர் தசரதரின் மகாராணி கௌசல்யாவின் வயிற்றில் இருந்து இந்த பூமியில் அவதரித்தார்.

நல்ல விஷயம் என்னவென்றால், ஸ்ரீ ராமர் (Shri Ram) பிறந்த இடத்தில் 400 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த உறுதியற்ற நிலை இப்போது நீங்கிவிட்டது. இருள் மறைந்துவிட்டது. ராமர் கோயில் கட்டுவதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டன. இப்போது அயோத்தியில், ஒரு பிரமாண்டமான, ஆச்சரியமான, தனித்துவமான, எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களுக்கு நன்மைகளை மட்டுமே அளிக்கும் ராமரின் கோயில் கட்டப்படும். அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் நாட்டு நலனிலும் உதவியாக இருக்கும். உலகமும் இதனால் நன்மை அடையும். அனைவருக்கும் நன்மை உண்டாகும்.  அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலால் அனைவருக்கும் நன்மை உண்டாகும் என எவ்வாறு கூறுகிறோம்? இந்த கேள்விக்கு பதிலளிக்க, முதலில் ராமர் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமர் என்ற வார்த்தையும் பொருள் என்ன? ராமர் எந்த ஒரு மததிற்கோ அல்லது சாதிக்கோ மட்டும் அபிமானமானவர் அல்ல. ராமர் ஸ்ருஷ்டியை உருவாக்கியவர். அதைக் காப்பவர். அதை அழிப்பவரும் ராமர்தான். ராமரின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டவை? அவர் கனிவானவர், இரக்கமுள்ளவர், மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் இரக்கமும் கருணையும் காட்டுபவர்.

உண்மையில் ராமரின் வாழ்க்கை மனிதனுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கான முறைகளைக் கற்பிக்கிறது. ராமரின் வாழ்க்கையில் வெறுப்பு இல்லை, விரோதம் இல்லை, க்ரோதம் இல்லை, டாம்பீகம் இல்லை, அகங்காரம் இல்லை. அன்பும் பரிவும் பக்குவமும் மட்டுமே நிறைந்துள்ளது.

படகோட்டியையும் வானரத் தலைவனையும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட மன்னன் ராமர். அகலிகைக்கு சாப விமோசனம் அளித்த அன்புள்ளம் படைத்தவர் ராமர்.

உண்மையான ராமராஜ்யம் என்பது அனைவரின் நலனுக்கான விருப்பமே ஆகும். ராமரும் அவரைப் பின்பற்றுபவர்களும் யாரையும் புண்படுத்த நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

தலைவன், அதாவது அரசன், ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என ராமர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆட்சியாளரின் மனம் தாராள மனப்பான்மையோடு இருக்க வேண்டும். அரசனுக்கு அதிக விவேகம் அவசியம். மன்னன் எப்படி இருக்க வேண்டும், மக்களின் நடத்தை என்னவாக இருக்க வேண்டும், இதையெல்லாம் நாம் ராமரின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: WATCH VIDEO: விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி, சரயு நதிக்கரையில் ஒளிரும் விளக்குகள்

ராமர் பலவீனவானவர்களின் பலம். ஒரு மன்னரின் ராஜ்ஜியத்தில் ஒருவர் கவலையுடன் இருந்தால் கூட அந்த மன்னன் நரகத்தில் இருக்க வேண்டியவன் என்று கருதியவர் ராமர்.

ராமர் நமக்கு அளித்துள்ள செய்தி அன்பு பற்றியது, இரக்கம் பற்றியது, சகோதரத்துவம் பற்றியது, நல்லிணக்கம் பற்றியது. ஆனால் இவை அனைத்தையும் பெற சத்தியத்தை விலையாக்கக் கூடாது. ராமரின் கதாபாத்திரத்தில் பல ஆச்சரியமான செய்திகள் மறைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் அவை இன்றும் பொருந்தும் வகையில் உள்ளன. ராமர் காமம் அதாவது ஆசைகள், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை மிகப்பெரிய எதிரிகளாகக் கருதினார்.

இவை அனைத்தும் இன்றும் நம் வாழ்வின் மிகப்பெரிய சாபங்களாக அன்றோ உள்ளன? விருப்பம், பேராசை மற்றும் கோபம் ஆகியவைதான் இன்றும் அனைத்து பிரச்சனைகளின் மூலமாக உள்ளன. நமக்கு ஆசைகள் இல்லையென்றால் நாம் பாவம் செய்ய மாட்டோம். பேராசை இல்லாவிட்டால், ஊழலிலிருந்து நாம் விலகி இருப்போம். கோபத்தை வென்றால், சர்ச்சைகள் அனைத்தும் முடிந்துவிடும். ராமர் கோயில் கட்டும் பணியில் ஈடுபடும்போது, ​​ராமரின் இலட்சியத்தை நாம் மறந்துவிடக் கூடாது என்பது தெளிவாகிறது. ராமரின் ஆளுமையை, அவர் காட்டிய வழிகளை மறக்கக்கூடாது. ராமரின் செய்தியை மறந்துவிடக்கூடாது. இவற்றை பின்பற்றினால் விரைவில் ராம ராஜ்யத்தின் கற்பனை நிஜமாகும்!!

 

Trending News