சர்ச்சையான ஆம்பூர் பிரியாணி திருவிழா - திடீரென ஒத்திவைப்பு - மழை தான் காரணமா ?

ஆம்பூரில் சர்ச்சையான பிரியாணி திருவிழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 12, 2022, 05:51 PM IST
  • ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு தடை
  • திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஆம்பூர் பிரியாணித் திருவிழா
  • மழைக் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்
சர்ச்சையான ஆம்பூர் பிரியாணி திருவிழா - திடீரென ஒத்திவைப்பு - மழை தான் காரணமா ? title=

ஆம்பூரில் நாளை அரசு சார்பில் பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது. மனித ஒருமைப்பாட்டுக்காக ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, ஆம்பூர் வர்த்தக மையத்தில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது. வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட அரங்குகள், 20க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மேலும் படிக்க |கேரளா மாட்டிறைச்சி புகைப்படத்திற்கு twitter பயனர்கள் எதிர்ப்பு!

ஆனால், இந்த திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு மட்டும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆம்பூர் பிரியாணி கடைகளில் பொதுவாக பீஃப் பிரியாணி மிக பிரபலம். ஆனால்  மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து சமூக வலைதளங்களில் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

20 வகையான பிரியாணிகள் திருவிழாவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பீஃப் பிரியாணிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன் என்று சமூக வலைதளங்கள் முதல் அரசியல் அமைப்புகள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி இடம்பெற வேண்டும் என்றும், இந்த தடையை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இல்லையென்றால் நாங்களே திருவிழா நடக்கும் பகுதிக்கு எதிரே மாட்டிறைச்சி பிரியாணி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வோம் என்று அறிவித்தது. அதேபோல், பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்காவிட்டால் திருவிழா நடைபெறும் அரங்கின் வாசலில் இலவசமாக பீஃப் பிரியாணி போடுவோம் என்று இஸ்லாமிய கூட்டமைப்பினரும் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டனர். 

மேலும் படிக்க | மாட்டுக்கறிக்கு தடை... திராவிட ஆட்சியா? சங்பரிவார் ஆட்சியா?

இந்நிலையில், தற்போது ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்  தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்களில் 13.05.2022 மற்றும் 14.05.2022 ஆகிய இரண்டு நாட்களில்  இடியுடன் கூடிய கனமழை பொழியும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பங்குபெற ஏதுவாக அமையாது. எனவே ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஓய்ந்தது புயல் : இனி பட்டையை கிளப்பும் வெயில்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News