முதல் கட்ட தடுப்பூசி போடும் பணிக்காக தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 190 மையங்கள் 2 கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கு முழுமையான தயார் நிலையில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 12, 2021, 04:56 PM IST
  • நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
  • புனேயில் இருந்து விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.
  • மொத்தம் 190 மையங்கள் 2 கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க தயார் நிலையில் உள்ளன.
முதல் கட்ட தடுப்பூசி போடும் பணிக்காக தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி title=

இரண்டு 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 16 முதல் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கும் என்பதை பிரதமர் மோடி (PM Narendra Modi) உறுதிப்படுத்தினார்.

இதற்காக நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட தடுப்பூசி போடும் பணியில் சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேருக்கும், பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படும்.

தமிழகத்திலும் (Tamil Nadu),  தடுப்பூசிகளை சேமித்து வைக்க குளிர்பதனவசதிகளை ஏற்படுத்துதல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில்,  மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டது. புனேயில் இருந்து விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்ததாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 190 மையங்கள் 2 கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கு முழுமையான தயார் நிலையில் உள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “முதல்கட்ட தடுப்பூசி போடும் பணியில்  சீரம் நிறுவனத்தின் 5.56 லட்சம் கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின்(Covaxin)  தடுப்பூசிகளும் தமிழகம் வர உள்ளது.  30 நாள் இடைவெளியில் ஒருவருக்கு 2  தடுப்பூசி போடப்படும்” என்றார்.

மேலும், “மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டில், யாருக்கு எந்த தடுப்பூசிகளை போடுவது என்பதை பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.” என சுகாதார செயலர் தெரிவித்தார்

புனேயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த தடுப்பூசிகள் தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தடுப்பூசி போட்டுக் கொள்ள தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார துறை செயலர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.

ALSO READ | முதல் கட்ட தடுப்பூசி செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்கும்: பிரதமர் மோடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News