ரூ.2 கோடி மதிப்பிலான சேதுபதி அரச குடும்பத்தின்‌ பெண்‌ சிலை மீட்பு

சேதுபதி அரச குடும்பத்தினருக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான பெண் சிலையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 5, 2022, 05:13 PM IST
  • பாரம்பரிய பெண் சிலை மீட்பு
  • 400 ஆண்டுகள் பழமையானது
  • சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
ரூ.2 கோடி மதிப்பிலான சேதுபதி அரச குடும்பத்தின்‌ பெண்‌ சிலை மீட்பு title=

தூத்துக்குடி மாவட்டம்‌, சாத்தான்குளம்‌ தாலுகா, படுக்கபத்துவை சேர்ந்த ஆறுமுகராஜ்‌ மற்றும்‌ , இடைச்சிவிளையை சேர்ந்த‌ குமரவேல்‌ ஆகியோர்‌ 400 ஆண்டுகளுக்கு மேல்‌ பழமையான ஐம்பொன்‌ பெண்‌ சிலையை பதுக்கி வைத்து ரூபாய்‌ 2 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக ரகசிய தகவல்‌ சிலை திருட்டு தடுப்பு பிரிவினருக்கு கிடைத்தது. இதன்‌ தொடர்ச்சியாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர்‌ ஜெயந்த்முரளி மற்றும்‌ காவல்‌ துறை தலைவர்‌ தினகரன்‌, காவல்‌ கண்காணிப்பாளர்‌ சிலை திருட்டு தடுப்பு பிரிவு
ரவி ஆகியோர்‌ சிலை விற்கும்‌ கடத்தல்‌ கும்பலுக்கு சந்தேகம்‌ ஏற்படாத வண்ணம்‌ சிலையை மீட்க ஒரு செயல்‌ திட்டம்‌ வகுத்தனர்‌.

இதையடுத்து மதுரை சரகம்‌, கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ மலைச்சாமி அவர்களின்‌ நேரடி மேற்பார்வையில்‌ ஆய்வாளர்‌ கவிதா மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இத்தனிப்படையினரை சிலை வாங்கும்‌ நபர்களை போல அவ்விற்பனையாள்களை அணுகச்‌ செய்தனர்‌. கடத்தல்‌ கும்பலின்‌ நம்பிக்கையை பெற ஒரு வாரத்திற்கு மேல்‌ ஆனது. இறுதியாக அவர்கள்‌ சிலையினை தனிப்படையினரிடம்‌ காட்ட ஒப்புக்கொண்டனர்‌. அச்சிலைக்கு‌ 2 கோடி 30 லட்சம்‌ ரூபாய் விலை பேசி முடித்துள்ளனர். 

திருச்சி மாவட்டம்‌, உறையூர்‌ மேட்டுத்தெருவைச்‌ சேர்ந்த காஜா, அவரது மகன் முஸ்தபா இருவரும்‌ சிலையை விற்பதற்கு புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த சிலையை ஏற்கனவே பேசியபடி திருச்சியிலிருந்து மதுரை செல்லும்‌ நான்கு வழிச்சாலை பழைய திருச்சி ரோடு பிரிவு (கிராப்பட்டி ரோடு பிரிவு) சந்திப்பிற்கு தனிப்படையினர்‌ கொண்டுவர செய்தனர்‌. அப்போது அந்த 3 நபர்களையும்‌ சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர், முஸ்தபா என்பவர்‌ கருப்புநிற பேக்கில்‌ வைத்திருந்த சுமார்‌ 400 ஆண்டுகள்‌ தொன்மையான சுமார்‌ ஒரு அடி உயரமுள்ள உலோகத்திலான பெண்‌ சிலையினையும்‌ கைப்பற்றினர்‌.

மேலும் படிக்க | சேலத்தில் தலை வெட்டி முனியப்பனாக மாறிய புத்தர் சிலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டம்‌, கிளாமடத்தை சேர்ந்த செல்வகுமார்‌ என்பவர்‌  இந்த சிலையை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செல்வக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு இந்த சிலை எப்படி கிடைத்து என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், செல்வகுமாரின் தந்தை குறி சொல்லும் பழக்கம் இருந்ததால், அவருக்கு சிவகங்கையைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரி 13 வருடங்களுக்கு முன்பு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

விசாரணைக்குப் பிறகு 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கும்பகோண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிலை எங்கிருந்து திருடப்பட்டது என்பது பற்றியும், இந்த திருட்டில்‌ சம்மந்தப்பட்ட நபர்கள்‌ யார்? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். தொல்லியல்‌ நிபுணர்களின்‌ கருத்தின்படி, இச்சிலை சிவகங்கை பகுதியை ஆண்ட சேதுபதி 
அரசவம்சத்து பெண்‌ சிலை எனவும்‌, அச்சிலையின்‌ ஆபரணங்கள்‌ மற்றும்‌ ஆடைகள்‌ அரச வம்சத்துடையது என்பதும்‌ தெரிய வந்துள்ளது. இச்சிலையானது தொல்லியல்‌ மாணவர்களுக்கும்‌ ஆராய்ச்சியாளர்களுக்கும்‌ தமிழக வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்‌ எனவும்‌ நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருடப்பட்ட சிலைகள்‌ பறிமுதல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News