புதிய காலக்கட்டத்தில் நுழைகிறோம்.... கூடுதல் பொறுப்பும், விழிப்பும் தேவை: PMK

புதிய காலக்கட்டத்தில் நுழைகிறோம் அதனால் கூடுதல் பொறுப்பும், விழிப்பும் தேவை என்ட்ரி தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Last Updated : May 4, 2020, 10:45 AM IST
புதிய காலக்கட்டத்தில் நுழைகிறோம்.... கூடுதல் பொறுப்பும், விழிப்பும் தேவை: PMK title=

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த 40 நாட்களாக நடைமுறையில் இருந்து வந்த முதல் இரு கட்ட ஊரடங்கு நிறைவடைந்து, தளர்வுகளுடன் கூடிய மூன்றாவது ஊரடங்கு இன்று  நடைமுறைக்கு வந்துள்ளது. இது கொரோனா பரவலுக்கு சாதகமாகவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு  பாதகமாகவும் இருக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் முதல் இரு கட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி சென்னையில் 1458 பேர், தமிழகத்தின் பிற பகுதிகளில் 1565 பேர் என ஒட்டுமொத்தமாக 3023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும்  107, அதாவது 6.83% மட்டும் தான் குறைவு. ஒட்டுமொத்த தமிழகமும், சென்னையும் ஒன்று தான் என்று கூறும் அளவுக்கு சென்னையில் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் உச்சத்தை அடைந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக அதிகாரப்பூர்வமாக  200&க்கும் மேற்பட்டோரும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் இன்னும் பல மடங்கு கூடுதலானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நோய்ப் பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய சூழலில், இருக்கும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. இத்தகைய சூழலில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக அமையப் போகிறது.

மூன்றாம் கட்ட ஊரடங்குக்கான விதிகளின்படி சென்னையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், கட்டுமானப் பொருட்கள் கடை முதல் மின்சாரக்கருவிகள் வரையிலான  தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.  தனியார் அலுவலகங்கள் முதன் மென்பொருள் அலுவலகங்கள் வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், சென்னை மாநகரம் கிட்டத்தட்ட இயல்புநிலைக்கு வந்து விட்டது போலவே தோற்றமளிக்கிறது.

சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் அதனால் எந்த பயனும் ஏற்படும் என்று தோன்றவில்லை. ஏனெனில் சென்னை கடல் என்றால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் கடலில் கரைத்த பெருங்காயம் ஆகும். நோய் கட்டுப்பாட்டு  பகுதிகளில் எந்த கடையும் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், அவை மிகச்சிறிய   பகுதிகள் தான். அந்த பகுதிகள் தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் கடைகள் திறந்திருக்கும்  என்பதால் அப்பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.

அரசு, காவல்துறை ஆகியவையும், பாட்டாளி மக்கள் கட்சியும் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல எடுத்துக் கூறியும் கடந்த சில வாரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு சந்தையில் குவிந்தது தான், சென்னையில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததற்கு காரணம் ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், அதற்கான அறிகுறிகள் இல்லாமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், புதிய தளர்வுகள் நிச்சயமாக ஆக்கப்பூர்வமான பலன்களைக் கொடுக்காது; மாறாக, கொரோனா நோய் கூடுதல் தீவிரத்துடன் பரவுவதற்கு தான் வழிவகுக்கும் என்பது உண்மை.

சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கை தமிழக அரசு கடுமையாக்கி இருக்க வேண்டும். அதற்கு  எந்தத் தடையும் இல்லை. மத்திய அரசு கூட, அது பிரகடனப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்று தான் கூறியிருக்கிறதே தவிர, கூடுதலாக கடுமையாக்கக் கூடாது என்று கூறவில்லை. இத்தகைய சூழலில் மத்திய அரசின் உத்தரவுகளை அப்படியே கடைபிடிக்கிறோம் என்று கூறி, மார்ச் 24&ஆம் தேதி ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு இருந்தது போன்ற சூழலை மாநில அரசு ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. சென்னையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, இனியாவது ஊரடங்கை கடுமையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக இருக்கும் நிலையில், நாம் விட்டில் பூச்சிகளாக இருக்கப் போகிறோமோ, விபரமானவர்களாக இருக்கப் போகிறோமா? என்பது தான் இன்றைய நிலையில் சென்னைவாசிகள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய வினா ஆகும். ஊரடங்கும், முழு ஊரடங்கும் இருந்த காலத்தில் தான் சென்னையில் கொத்து கொத்தாக கொரோனா பரவல் ஏற்பட்டது. இப்போதும் கூட ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா, ஒரே தெருவில் 54 பேருக்கு கொரோனா என்று செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ஊரடங்கு தளர்வு காலத்திலும் நோய்ப்பரவாமல் தடுப்பது நாம் கடைபிடிக்கப்போகும் சுயகட்டுப்பாட்டில் தான் உள்ளது.

எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்ட மக்கள் இன்று முதல் அடுத்து வரும் 14 நாட்களை ஊரடங்கு தளர்வு காலமாக கருதாமல், தண்டனை காலமாக கருதி வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இக்காலத்தில் கூடுதல் பொறுப்புடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். அப்போது தான் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் போதாவது புதிய தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க  முடியும் என்றார். 

Trending News