)
Mallikarjun Kharge: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் 370ஆவது பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தற்போதுதான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த செப். 18ஆம் தேதி 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலும், செப். 25ஆம் தேதி 26 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அக். 1ஆம் தேதி 40 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தலும் நடைபெற இருக்கின்றன. அந்த வகையில், இன்றோடு மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஓய்கின்றன என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பரப்புரையில் இறங்கின.
ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி சார்பில் பரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பாஜக தனித்து நின்று 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், இந்திய கூட்டணி கட்சிகளும் முட்டிமோதி வருகின்றன.
#WATCH | Jammu and Kashmi: Congress President Mallikarjun Kharge became unwell while addressing a public gathering in Kathua. pic.twitter.com/OXOPFmiyUB
— ANI (@ANI) September 29, 2024
அந்த வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று கத்துவா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசிக்கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. ஏறத்தாழ அவர் மயங்கி விழு இருந்த நிலையில் அவரை மேடையில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தாங்கிபிடித்தனர். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு, சற்று நேரம் பிரச்சாரம் நிறுத்திவைக்கப்பட்டது.
கார்கே பேசிக்கொண்டிருந்தபோதே, அவர் அதிகமாக மூச்சுவாங்குவதை பார்க்க முடிந்தது. அவருக்கு தலைசுற்றல் நின்ற பிறகு சற்று நிதானத்திற்கு வந்த உடன் மீண்டும் உரையை தொடங்கி, விரைவாக முடித்தார். மூன்றாம் கட்ட தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டதால் கார்கேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
தலைசுற்றலுக்கு பின்னர் நிதானத்திற்கு வந்த பிறகு மல்லிகார்ஜூனே கார்கே பேசியபோது,"மாநில அந்தஸ்தை மீட்க போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது, நான் அவ்வளவு சீக்கிரம் இறக்கப் போவதில்லை. பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன்" என்றார்.
மேலும் கூறுகையில்,"மத்திய அரசு தேர்தலை நடத்த விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் ஓரிரு வருடங்களிலேயே தேர்தலை நடத்தியிருப்பார்கள். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு தேர்தலுக்குத் தயாராகத் தொடங்கினர். லெப்டினன்ட் கவர்னர் மூலம் ரிமோட் கண்ட்ரோல் அரசாங்கத்தை இயக்க பாஜக விரும்புகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி எதையும் கொடுக்கவில்லை. 10 ஆண்டுகளில் உங்களுக்கு வளத்தை மீண்டும் கொண்டு வர முடியாத ஒரு நபரை உங்களால் நம்ப முடியுமா? பாஜக தலைவர் ஒருவர் உங்கள் முன் வந்தால், அவர்கள் வளத்தை கொண்டு வந்தாரா இல்லையா என்று கேளுங்கள்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ