அதிமுக அலுவலகம்: இபிஎஸ் வெற்றி, ஓபிஎஸ் தோல்வி ஏன்? 61 பக்க தீர்ப்பின் சாராம்சம் என்ன

AIADMK Headquarters Keys: அதிமுக அலுவலகம் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. ஓபிஎஸ்ஸிக்கு தொடரும் பின்னடைவு. இன்றைய தீர்ப்பின் சாராம்சம் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 20, 2022, 06:22 PM IST
  • காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை தடுக்கப்பட்டிருக்கும்.
  • ஓ. பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தின் மீது சுவாதீன உரிமையை கோர முடியாது.
  • ஒரு மாதத்திற்கு ஆதரவாளர்கள், தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது.
அதிமுக அலுவலகம்: இபிஎஸ் வெற்றி, ஓபிஎஸ் தோல்வி ஏன்? 61 பக்க தீர்ப்பின் சாராம்சம் என்ன title=

சென்னை: ஜூலை 11 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தங்கள் வாதங்களை வைத்தனர். அதேபோல தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விளங்கங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற வேண்டும் என்றும், அதிமுக அலுவலக சாவியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஏன் எடப்பாடி பழனிசாமி வசம் சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் கூறியது? வழக்கு விசாரணையின் போது என்ன நடந்தது? முழு விவரங்களையும் பார்ப்போம்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த 61 பக்க தீர்ப்பின் சாராம்சம்

- ஒ.பன்னீர்செல்வம் அணியினர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்லும்வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் நுழைந்தபிறகே லேசான தடியடியை நடத்தி உள்ளனர்.

- ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி, ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்க கூடாது.

- எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்துக்கு செல்ல அனுமதித்து இருக்கக்கூடாது.

- இரு தலைவர்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி கவலை கொள்ளவில்லை.

- காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறை தடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க: ஓங்கியது எடப்பாடி கை | அலுவலகத்தின் சாவியை பெற்றார் பழனிசாமி

- பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் கட்சியின் பெருமான்மையினரின் முடிவு. அவற்றை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாத வரை, அந்த முடிவே மேலோங்கி நிற்கும்.

- ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி அலுவலகத்தின் மீது சுவாதீன உரிமையை கோர முடியாது.

- கட்சியில் இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை என்பது சொத்தில் சுவாதீனம் சம்பந்தப்பட்டதா, இல்லையா என்பது வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவில் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. ஆனால் கட்சியின் இரு பிரிவினர் இடையேயான பிரச்சினை என்று மட்டுமே சொல்லப்பட்டு உள்ளது.

- கோட்டாட்சியர் உத்தரவில் ஜூலை 11ம் தேதி கட்சி அலுவலகம் யார் தரப்பிடம் இருந்தது என கூறவில்லை, ஆனால் அந்த தகராறு மாநிலம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளாதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

- மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே ஆர்.டி.ஓ. உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

- ஜூலை 5 முதல் 11ம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது, கட்சி அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

மேலும் படிக்க: EPS எடுத்த அதிரடி நடவடிக்கை; எதிர்கட்சி துணை தலைவர் பதவியையும் இழந்த OPS

- காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் தான் கட்சி தலைமை அலுவலகம் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

- பொதுக்குழு மற்றும் வன்முறை நடந்த ஜூலை 11ம் தேதி கட்சி அலுவலம் யார் கட்டுப்பாட்டில் இருந்தது என எவ்வித விசாரணையும் நடத்தாமல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தவறு.

- கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர். அந்த கட்சி அலுவலகத்தில் எவ்வித உரிமையும் கோர முடியாது.  கட்சி அலுவலகத்தை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைந்தது அத்துமீறலாகத் தான் கருத வேண்டும்.

- சீல் வைக்க வேண்டும் என்றால் நிலம், மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான உண்மையான பிரச்சினை இருக்க வேண்டும். கலவரத்தை உருவாக்கி பிரச்சினை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்பது, கட்சி அலுவலகத்தில் உண்மையான பிரச்சினையாக கருத முடியாது.

- காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஆர்.டி.ஓ. ஒப்படைக்க வேண்டும். காவல்துறை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

- ஒரு மாதத்திற்கு ஆதரவாளர்கள், தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக் கூடாது.

- காவல்துறை தாக்கல் செய்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை உயர் நீதிமன்ற பதிவுத்துறை பாதுகாக்க வேண்டும்.

- சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஒ.பி.எஸ். கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவு பிறப்பித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழக்குகளை  உயர்நீதிமன்ற நீதிபதி முடித்து வைத்தார்.

மேலும் படிக்க: அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் - அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News