வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த மருத்துவர் அய்யாவுக்கு பாராட்டு விழா!

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த

Last Updated : Mar 4, 2020, 05:43 PM IST
வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த மருத்துவர் அய்யாவுக்கு பாராட்டு விழா!  title=

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த
 மருத்துவர் அய்யாவுக்கு மார்ச் 14-ஆம் தேதி பாராட்டு விழா! 

இது குறித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... காவிரி பாசன மாவட்டங்களின் நான்கரை ஆண்டு பெருங்கனவு வெற்றிகரமாக நனவாகியிருக்கிறது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அந்த கனவை நிறைவேற்றி  வைத்தவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்றால், அந்த கனவு நிறைவேற அனைத்து வழிகளிலும் அடிப்படையாக இருந்தவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும், அந்த திட்டத்திற்கு எதிரான முதல் குரல் மருத்துவர் அய்யா அவர்களிடமிருந்து தான் ஒலிக்கும் என்பதை தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒப்புக்கொள்வார்கள். அதேபோல் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் வலியுறுத்திய அரசியல் கட்சித் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன், முந்தைய திமுக அரசு ஒப்பந்தம்  செய்து காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு பெருந்துரோகம் இழைத்தது. அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உழவர்களும், பொதுமக்களும் போராடியதாலும், அப்போது ஆட்சியிலிருந்து ஜெயலலிதா தலைமையிலான அரசு மக்களின் உணர்வுகளை மதித்து, குஜராத் நிறுவனத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்காததாலும்,  மு.க.ஸ்டாலின் செய்து கொண்ட மீத்தேன் எரிவாயு ஒப்பந்தம் 2014-ஆம் ஆண்டில் காலாவதி ஆனது.

அதனால், காவிரி பாசன மாவட்ட உழவர்கள் நிம்மதியடைந்த நிலையில், பாறை எரிவாயு திட்டங்களை  செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்தது. மீத்தேன் திட்டத்தை விட பாறை எரிவாயு திட்டம் மிகவும் ஆபத்தானது என்பதால், அதை எதிர்த்து மருத்துவர் அய்யா தான் மாபெரும் போராட்டங்களை அறிவித்து, முன்னெடுத்தார். அந்தத் திட்டங்களை முறியடிப்பது குறித்து உழவர் அமைப்புகளுடன் விவாதித்த மருத்துவர் அய்யா அவர்கள் தான், காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான  பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலில் வேறு எந்த கட்சியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வாக்குறுதி அளிக்கவில்லை.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான மருத்துவர் அய்யாவின் பணிகள் அத்துடன் நிறைவடைந்து விடவில்லை. 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெடுவாசலில்  ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அதுமட்டுமின்றி, 03.03.2017 அன்று என்னை நெடுவாசலுக்கு அனுப்பி, அங்கு போராடி வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வைத்ததுடன், தனியாகவும் ஒரு போராட்டத்தை நடத்த வைத்தார். தொடர்ந்து 21.06.2017 அன்று கதிராமங்கலத்துக்கு என்னை அனுப்பி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வைத்தார். அதன் உச்சமாக அந்த ஆண்டின் ஜூலை 28, 29, 30 ஆகிய நாட்களில்  காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க வலியுறுத்தி காவிரி  தமிழகத்திற்குள் நுழையும் ஓகனேக்கலில் தொடங்கி கடலில் கலக்கும் பூம்புகார் வரை மருத்துவர் அய்யாவின் ஆணைப்படி நான் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டேன்.

2018-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி சென்னையில் உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்களை மருத்துவர் அய்யா அவர்கள் நிறைவேற்றினார். மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி அதே ஆண்டின் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தொடங்கி நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வழியாக சிதம்பரம் வரை காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் துண்டறிக்கைகளை வழங்கும் பயணத்தை நான் மேற்கொண்டேன்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க 10 கோரிக்கைகளை முன்வைத்த மருத்துவர் அய்யா அவர்கள், அந்தக் கோரிக்கைகளில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  அறிவிக்கச் செய்வதை முதல் கோரிக்கையாக இடம் பெறச் செய்தார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை ஒரு முறை தில்லியில் சந்தித்தும், முதலமைச்சரை ஒருமுறை அவரது இல்லத்தில் சந்தித்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க வேண்டுமென அய்யா  வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, என்னை இருமுறை முதலமைச்சரை சந்திக்க வைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தச் செய்ததுடன், இதே கோரிக்கைக்காக இரு முறை முதலமைச்சருக்கு கடிதமும் எழுத வைத்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாடாளுமன்ற மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் இதை வலியுறுத்தவும் செய்தார். மருத்துவர் அய்யாவின் இந்த இடைவிடாத வலியுறுத்தல் காரணமாகவே  காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கு முன் பா.ம.க. உருவாக்கிய இக்கோரிக்கையை சாத்தியமாக்கிய பெருமை மருத்துவர் அய்யாவையே சேரும்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கிக் கொடுத்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு உழவர் அமைப்புகளின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.  நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வரும் 14-ஆம் தேதி சனிக்கிழமை இப்பாராட்டு விழா நடைபெறும்.  இவ்விழாவில் மருத்துவர் அய்யா அவர்களுடன் நான், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்களும், உழவர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வர். 

 

Trending News