ஒரு பாலமும் ஐந்து திருமணங்களும்! கொரோனா கால புதுமைகள்!!

கொரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு, தமிழக-கேரள எல்லையில், இந்நாட்களில் திருமணங்கள் மிகவும் எளிய அரிய வகையில் நடத்தப்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2020, 02:22 PM IST
  • மக்கள், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மிகவும் எளிய வழிகளில் திருமணங்களை நடத்தி வருகின்றனர்.
  • மணமகன், முக்கிய சில நபர்களுடன், சின்னாரில், தமிழக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் வருகிறார்.
  • பாலத்தின் இந்தப் பக்கம் மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக்கொள்வதோடு, திருமண சடங்குகள் நிறைவடைகின்றன.
ஒரு பாலமும் ஐந்து திருமணங்களும்! கொரோனா கால புதுமைகள்!! title=

கொரோனா (Corona) காலத்தில், தமிழக (Tamil Nadu) கேரள (Kerala) எல்லையில் இருக்கும் ஒரு பாலம், திருமணங்கள் (Marriages) நடக்கும் முறைகளை மாற்றுவதில் ஒரு பெரும் பங்கு வகித்து வருகிறது.

கொரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு, தமிழக-கேரள எல்லையில், இந்நாட்களில் திருமணங்கள் மிகவும் எளிய அரிய வகையில் நடத்தப்படுகின்றன.

தமிழக கேரள எல்லையில் இருக்கும் மரயூர் கிராமத்தில் (Border village Marayur), மக்கள், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மிகவும் எளிய வழிகளில் திருமணங்களை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் பல தலைமுறைகளாக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் குடியேறியுள்ளனர்.

கோவிட்-19 (Covid-19) தொற்றுக்கு முன்னர், இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொண்டால், இரு வீட்டு சுற்றமும், நட்பும், உறவினர்களும் சேர, மண்டபத்திலோ கோயில்களிலோ மிக விமர்சையாக திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பல நாட்கள் முன்னரே மணமகன் மணமகள் வீடுகளில் உறவினர் கூட்டம் கூடத் துவங்கும்.

”கொரோனா தொற்று துவங்கியபின், பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், தொற்றின் வீரியம் நிற்காமல் தொடரவே, சிலர் எளிய முறையில் திருமணத்தை நடத்தினர். மணமகன், முக்கிய சில நபர்களுடன், சின்னாரில்,  தமிழக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் வருகிறார். பாலத்தின் (Bridge) இந்தப் பக்கம் மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக்கொள்வதோடு, திருமண சடங்குகள் நிறைவடைகின்றன” என உள்ளூர் பத்திரிக்கையாளரும் மரயூர் வாசியுமான ஜெயன் வாரியாத் தெரிவிக்கிறார்.

இப்படிப்பட்ட முதல் திருமணம் ஒரு மாதம் முன்பு இப்பாலத்தில் நடந்தது. அதன் பிறகு, இதே பாலத்தில், இதே இடத்தில், இதே முறையில் அதே போல் ஐந்து திருமணங்கள் நடந்துவிட்டன.

ALSO READ: என்னது?... எனக்கு கொரோனா பாசிட்டிவா?... பொது இடத்தில் பெண் செய்த காரியம்

இந்தத் திருமணங்களுக்கு, தமிழக அரசின் அனுமதியும், மணப்பெண்ணுக்கு கேரள சுகாதாரத் துறை அளிக்கும் மருத்துவ சான்றிதழும் அவசியமாகும்.

முன்னர், திருமணங்களில் ஆடம்பரம் அதிகமாக இருந்தது. முடிந்தாலும் முடியாவிட்டாலும், சமூக அங்கீகாரத்திற்காக மக்கள் மிக அதிக அளவில் பண விரயம் செய்து திருமணங்களை ஆடம்பரமாக நடத்தி வந்தார்கள். ஆனால், மிக எளிய முறையில் நடக்கும் திருமணங்களுக்கும் அதே அளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை இந்தக் கொரோனா கால திருமணங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

இங்கு நடந்துள்ள அனைத்து திருமணங்களிலும் கோவிட்-19 வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன என மூணார் போலீஸ் சூப்பரிண்டண்ட் எம். ரமேஷ் குமார் கூறினார். ”மணமகன் மணமகள் தரப்பிலிருந்து தலா ஐந்து பேர் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். சில நிமிடங்களில் திருமண நிகழ்வுகள் நடந்து முடிந்தன. இந்த வகைத் திருமணங்கள் புதிய திருமண வடிவமாக உருவெடுத்து வருகின்றன. கொரோனாவுக்குப் பிறகும் இவ்வகையிலேயே திருமணங்களை நடத்த மக்கள் முன்வருவார்கள் என தோன்றுகிறது” என்றார் திரு. ஜெயன்.

திருமணங்கள் நடக்கும் முறையை, இந்த பாலமும் இங்கு நடந்துள்ள ஐந்து திருமணங்களும் மாற்றும் என எண்ணப்படுகிறது.

ALSO READ: Watch: வைரலாகும் சமூக இடைவெளியுடன் ‘சல்சா நடனம்’ ஆடும் ஜோடி...

Trending News