பெங்களூரு தமிழர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெறும் புத்தக திருவிழா

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியான தமிழர்கள் அதிகம் வாழும் பெங்களூரு நகரில் தமிழோடு தமிழர்கள் கலந்துரையாட இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது..   

Written by - Amarvannan R | Edited by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2023, 01:46 PM IST
  • இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா
  • பெங்களுரில் வெகுவிமரிசையாக தொடங்கியது
  • தமிழர்கள் ஏற்பாட்டில் நடைபெறுகிறது
பெங்களூரு தமிழர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெறும் புத்தக திருவிழா title=

கர்நாடக மாநிலம் பெங்களூர் தலைநகரில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழோடு தமிழர்களை இணைக்கும் வகையாக இரண்டாம் ஆண்டு தமிழ் புத்தகத் திருவிழா நேற்று இனிதே தொடங்கியது. இத்திருவிழா டிசம்பர் 10ஆம் தேதி வரை  நடைபெறுகிறது.  பெங்களூரு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடூட் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நடக்கும் புத்தக திருவிழாவில் தினகரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பதிப்பகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். கர்நாடக அரசின் சுற்றுலா துறை இயக்குனர் டாக்டர் ராம்பிரசாத் மனோர், முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜ், கர்நாடக மாநில வாழ் மூத்த பத்திரிகையாளர் பா.தேனமுதன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் வாசிக்கும் பழக்கம் கொண்ட பொதுமக்களை கவர்ந்து புத்தகங்களை வாங்க செய்ய மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதிலும் உலகப் புகழ்பெற்ற சென்னை புத்தகத் திருவிழா மிக முக்கியமானதாகும். இதில் மாறாக கர்நாடக மாநிலத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் அனைத்து வகையான தமிழ் புத்தகங்களை தடையின்றி கொண்டு சேர்க்க கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் புத்தகங்களை வாங்குவதற்காக தமிழர்கள் ஒன்றிணைவதற்கு மட்டுமில்லாமல் ; கர்நாடக மாநிலத்தில் நடத்தப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் தங்களது தமிழ் புலமையை அதிகரித்துக் கொள்ள இந்தப் புத்தகத்தில் திருவிழாவில் தமிழ் மாணவர்களுக்காக கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஒரு பக்கத்தில் ஒரு கதை சொல்லுதல் வினா விடை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் தமிழ் மாணவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் - மக்களே உஷார்

இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்க நூல்கள் வெளியிடு போன்ற நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேசும்போது, "தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது பெரு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழர்கள் சுயமரியாதை உணர்வுடன் வாழ்பவர்கள். அதற்கு காரணம் முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், சுதந்திர போராட்ட தியாகிகள் வ.உசிதம்பரம்பிள்ளை, பாரதியார்,  பேரறிஞர் அண்ணா,  மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  மு.கருணாநிதி போன்றோர் காட்டிய வழியாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களால் தமிழர்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக கடத்தப்பட்ட போதும் தற்பொழுது வரை அவர்கள் தங்கள் மொழியை பாதுகாத்து தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களது சிறப்பு .இதே போல் கர்நாடக மாநிலத்திலும் தமிழர்கள் தங்களது பாரம்பரியத்தை பின்பற்றி தாய் மொழியை பாதுகாத்து வருகின்றனர். அது அவர்களது தனிச் சிறப்பு என்று எடுத்துரைத்தார்.

தமிழர்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அவர்களது மொழிப்பற்று மற்றும் தங்களது வாழ்வியலை விட்டுக்கொடுக்காமல் பின்பற்றி வருகின்றனர்.  இதை விட்டுக் கொடுக்காமல் அவர்கள் வாழ்ந்து வருவதற்கு காரணம் அவர்களது வரலாறு மிகப்பெரிய தொன்மை கொண்டது. இதற்குக் காரணம் அவர்களது வரலாற்று பெருமைக்குரிய இசை, இலக்கியம் மற்றும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என பெருமைமிகு அரசர்கள் ஆட்சி கொண்டதும் காரணம்" என்றார்.

விழா மேடையில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவுக்கு வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News