ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய பயணிகள்... இரவில் உணவு விநியோகம் - மீட்பு எப்போது?

Tirunelveli Rain Damage: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் உள்ள பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2023, 06:48 AM IST
  • பல மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் மதுரைக்கு நிவாரண பொருள்கள் வருகின்றன.
  • அதை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் எடுத்துவரப்படுகிறது.
  • ஹெலிகாப்டர் மூலம் நெல்லை, தூத்துக்குடியில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய பயணிகள்... இரவில் உணவு விநியோகம் - மீட்பு எப்போது? title=

Tirunelveli Rain Damage: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை (டிச.16) இரவு முதல் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் நகரப் பகுதிகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஆற்றங்கரையோர மக்களும் சிறப்பு முகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இதுவரை தென்மாவட்டங்கள் சந்தித்திராத வரலாறு காணாத மழையினால் இத்தகைய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நேற்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் வடியவில்லை. 

முதலமைச்சர் ஆலோசனை

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள குளங்கள் நிரம்பி வழிந்துவரும் சூழலில், விளைநிலைங்கள் மொத்தமும் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் சேதத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், கிராமப் புறங்களிலும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நான்கு தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் படிக்க | தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நான்கு மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்," முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு குறிப்பாக  தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு தாம்பரம், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 18 லாரிகள் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4000 பிராட் பாக்கெட்டுகள், 10 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 5000 தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய உணவு பொருள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில், 41 ஆயிரத்து 100 போர்வைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. 

மேலும், வெள்ள சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாளை (அதாவது இன்று) காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படும். லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் மதுரை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக மதுரையில் தனியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

ரயிலில் சிக்கி உள்ள மக்கள்

மேலும், நேற்று முன்தினம் (டிச. 17) இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட ரயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் அதிகரிப்பால் 30 மணி நேரத்திற்கும் மேலாக ரயிலில் உள்ள பயணிகள் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. ரயிலில் சிக்கி உள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஆனால் இரவு நேரம் என்பதால் ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை. மாற்று வழியில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் ரயிலில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இன்னும் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News