என்னது இருசக்கர வாகனத்தில் இருவர் தான் செல்ல வேண்டுமா?

இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

Last Updated : May 13, 2019, 10:32 PM IST
என்னது இருசக்கர வாகனத்தில் இருவர் தான் செல்ல வேண்டுமா? title=

இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு நண்பர்கள் சேர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதியதில் கணேசன், ரகு என்ற இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்தை அடுத்து தங்களுக்கு வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி இருவரும் சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்றம் கணேசனுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், ரகுவுக்கு 87 ஆயிரத்து 750 ரூபாய் இழப்பீடும் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது

இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட விபத்தில் காயமடைந்த கணேசன், ரகு ஆகியோர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு, நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ஓட்டுபவருக்கு கைப்பிடியை இயக்க சிரமம் ஏற்படும் என்பதாலும், நிலைதடுமாறும் சூழல் ஏற்படும் என்பதாலும் இந்த விபத்தில் அவர்களுக்கும் சமமான பங்கு உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

அதனை கருத்தில் கொண்டே தீர்ப்பாயம் இழப்பீடு நிர்ணயித்துள்ளதாக கூறி, மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வது விதிகளுக்கு முரணானது. இருப்பினும் இருவருக்கு மேல் பயணம் செய்வதை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

Trending News