'அயோத்திக்கு போகாமல்... நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' - புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!

Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2024, 05:05 PM IST
  • இந்து சமய அறநிலைத்துறை ஆன்மீகத்துக்கு ஒருபொழுதும் தடை விதித்ததில்லை - சேகர் பாபு
  • இன்று மட்டும் 20 திருக்கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது - சேகர் பாபு
  • ராமர் பஜனைக்கு தடை விதிக்கவில்லை - சேகர் பாபு
'அயோத்திக்கு போகாமல்... நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' - புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!  title=

Minister Sekar Babu On Ram Temple Controversy: சென்னை கோட்டபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா சம்ப்ரோஷன பெருவிழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனை அடுத்து இக்கோவிலுக்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அறநிலையத்துறை செய்தது என்ன? 

அப்போது அவர் கூறுகையில்,"தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று நடைபெற்று வரக்கூடிய இந்த ஆட்சியில் இன்று மட்டும் 20 திருக்கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது. இதில் ஐந்து திருகோவில்கள் வைணவ கோவில்களாகும். தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இதுவரையில் 1290 திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டு தமிழக அரசு 100 கோடி ரூபாய் பழைய கோயில்களை சீரமைப்பதற்காக வழங்கப்பட்டது. 153 கோடி ரூபாய் செலவில் கடந்த ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோல் இந்த ஆண்டும் 2023 மற்றும் 24 ஆம் ஆண்டிற்கு 100 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 43.5 கோடி ரூபாய் உபயதாரர் நிதியாக வரப்பட்டு 200க்கும் மேற்பட்ட திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள் ஆதிதிராவிடர்கள் பகுதியில் அமைந்துள்ள சிறு கோவில்கள் என இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் ஒரு லட்சம் ரூபாய் என்கின்ற மானியத்தை 2 லட்சம் ரூபாய் என்று உயர்த்தி 5000 திருக்கோவில்களில் தற்பொழுது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல், மீண்டும் சனதான தர்மம் -வானதி சீனிவாசன்

திருகோயில்களுக்கு நிதி உதவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயில்களில் 100 கோவில்கள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கோவிலுக்கும் தலா 15 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருக்கோவில்களில் நிதி இல்லாத காரணத்தினால் பல திருக்கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்கின்ற நிலையில் கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு 8 கோடி ரூபாய் அரசின் சார்பில் முதலமைச்சர் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு 6 கோடி ரூபாய் மானியமாக தமிழக அரசு சார்பிலும் தஞ்சாவூர் தேவஸ்தான திருக்கோயில்களில் அரசு மானியமே இதுவரை இல்லாத இடங்களில் 3 கோடி ரூபாய் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் மானியமாக தமிழக அரசு சார்பில் வழங்கிக் கொண்டிருக்கிறோம். திருச்சூர் செப்பனிடுதல் என்றாலும் தங்கத்தேர் வெள்ளி தேர் தயாரித்தல் என்றாலும் திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் பக்தர்கள் காணிக்கை மண்டபம் என பல நூறு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுவரையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 6721 ஏக்கர் நிலம் கோயிலுக்கு சொந்தமானது மீட்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளது. 756 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு உத்தரவுக்கு பின்னர் கூடுதலாக 7 திருக்கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழர்கள் பெருமானையும் வழிபடுவார்கள்... பெரியாரையும் பின்பற்றுவார்கள் - ஸ்டாலின் அதிரடி!

அன்னதான திட்டங்கள்

3 வேலை அன்னதானம் 8 கோவில்களில் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முதலமைச்சர் மேற்பார்வையில் பெரியபாளையம் மாசாணி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டம் நடத்தப்பட உள்ளது. 

பழனி, திருக்கோவிலை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லையப்பர் கோவிலில் விசேஷ நாட்களில் 500 பேருக்கு அன்னதானத் திட்டம் இந்த ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. வடலூர் திருப்பூர் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்கள் தினந்தோறும் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கக்கூடிய திட்டமும் இந்த ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு செல்வதற்காக 200 பேரை கடந்தாண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 300 பேர்களை ஆன்மீக பாதயாத்திரைக்கு ஆறு பிரிவுகளாக அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான முதல் பயணம் இந்த மாதம் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. அறுபடை வீடுகளான முருகனின் திருக்கோயில்கள் ஆண்டுக்கு ஆயிரம் பேரை இலவசமாக ஆன்மீக பயணம் அழைத்துச் செல்வதற்காக திட்டம் 28ஆம் தேதி தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | ராமர் கோயில் விழா... சிறப்பு பூஜைகள் விவகாரம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'

ராமர் திருக்கோவில் பூஜை நடைபெற்று வரும் வேளையில் தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் எந்தவித பூஜைக்கும் தடை விதிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கோதண்டராமன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் திருமலை மற்றும் முள்ளங்குடி அருள்மிகு கோதண்டராமன் திருக்கோவிலுக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
 
இந்த ஆட்சியில் தான் அதிகமான குடமுழுக்கு திருவிழா நடைபெறக்கூடிய ஆட்சி நமது முதலமைச்சர் ஆட்சி. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைத்து திருக்கோவில்களிலும் அனைத்து பக்தர்கள் தங்கள் விரும்பக்கூடிய பக்தி பாடல்களை பாடவும் எந்த விதமான தடை அளிக்கவில்லை என தெள்ளத் தெளிவாக தெரிவிக்கிறோம்.

ஆளுநர் வருகையின் போது அவருக்கு திருக்கோயில் சிவப்பு கம்பளம் விரித்து சிறந்த முறையில் தரிசனம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை பொருத்தவரையில் யாருக்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது. அவர் அச்சத்தில் இருந்தால் அவர் பக்கத்தில் அமர்வாரா ஆளுநர். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல ஆளுநர் யாரைப் பார்த்தாலும் அப்படி தோன்றுகிறது போல இருக்கிறது. அந்த திருக்கோயிலின் பட்டாட்சியர் மோகன், தங்கள் எந்த விதமான அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை எனவும் தங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அயோத்தி குழந்தை ராமரின் முழு அலங்காரம்

கலைஞர் வீட்டு பக்கத்தில் ராமர் பஜனை

திருக்கோவிலுக்கு பாதுகாப்பான ஆட்சி என்றால் அது நமது திராவிட மாடல் ஆட்சிதான். திருக்கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு 3 ஆயிரம் ரூபாய் கால நதியை 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தது நமது முதல்வர் ஆட்சியில்தான். இந்த ஆட்சி ஏற்பட்ட பின்பு தான் 81 கோடி ரூபாய் மதிப்பில் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் என அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. 

ஆளுநர் தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு எதிராக தங்களது ஆட்சி நடைபெறுவதாக சித்தரிக்க முயற்சி செய்கிறார். குறிப்பாக மத்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் கண்ணோட்டத்திலேயே இங்கு தமிழகத்தை அணுகுகிறார். காஞ்சிபுரம் காமாட்சி திருக்கோயில் பணிகள் தொடர்பாக நிர்மலா சீதாராமன் கேள்விகள் எழுப்பியபோது, அதற்கான அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்துள்ளார்கள். 

இருந்தும் இங்கு வரக்கூடியவர்கள் நிகழ்ச்சியை காண என்ன செய்தீர்கள் என்று கேட்டுள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன் குற்ற நோக்குடன் மட்டுமே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு திருக்கோயில்களையும் அணுகுகிறார்.

ராமர் பஜனைக்கு திருக்கோயிலில் நடத்துவதற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. நாங்கள் தடை விதிக்கவில்லை என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள கோவிலில் எல்இடி திரை அமைக்கப்பட்டு பக்தர்கள் அயோத்தியில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | அயோத்தி வந்தார் குழந்தை ஸ்ரீராமர்... 1528 முதல் 2024 வரை... கடந்து வந்த பாதை..!!

எந்த தடையும் விதிக்கவில்லை

அந்த திருக்கோவிலுக்கு கூட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் வருவதாக கூறினார்கள், நாங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை. இந்து சமய அறநிலை பொறுத்தவரையில் வரையில் திருக்கோவிலுக்குள் எல்இடி திரை அமைப்பது, அன்னதானம் வழங்குவது என எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் அதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது.

நாங்கள் ஆன்மீகத்துக்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை. ஆனால் ஆன்மீகத்துடன் அரசியலை சேர்த்து நடத்தும் பொழுது தான் அதற்கான தடையை இந்து சமய அறநிலைத்துறை விதிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் நீதிமன்றமே இந்து சமய அறநிலைத்துறைக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு பொய்க்கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என நீதிமன்றமே எடுத்துரைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் ஆன்மீகவாதிக்கும் இறையாண்மை வாதிகளுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கிறது.

அரசியல் கலந்த ஆன்மீகம்

அயோத்தியில் பெரிய அளவில் ராமர் திருக்கோவிலுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றியத்தில் ஆட்சி செய்யக்கூடிய நிதி அமைச்சர் அங்கு செல்லாமல் இங்கு செல்கிறார் என்றால் அவர் ஆன்மீகத்திற்காக செல்லவில்லை. அரசியல் கலந்த ஆன்மீகத்தை நடத்தவே அவர் அங்கு செல்கிறார் என்பது இதில் தெளிவாகிறது. 

இதற்காகவே இவர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இவ்வளவு பெரிய பதவி ஏற்கக்கூடிய ஒரு நபர் இவ்வளவு கீழே இறங்கி வந்து, இது போன்ற பொய்களை உரைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த ஆட்சி குறித்து எவ்வளவு பொய் பரப்புரைகள் மேற்கொண்டாலும் திராவிட ஆட்சியை பொருத்தவரையில் மக்கள் ஆன்மீகவாதிகள் என்றும் குறை கூறுவதில்லை, ஒரு படி மேல் வைத்து தான் பேசுகிறார்கள்.

அவதூறுகளைப் பற்றி இந்து சமய அறநிலைத்துறை ஒருபொழுதும் கவலை கொண்டதில்லை. இந்த அவதூறு பரப்புகள் தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை உள்ள துறைகளில் இந்த தொடர்பாக விளக்கங்களையும் கேட்டு அளித்துள்ளோம். ஒரு சிறு தவறுக்கு கூட இந்த ஆட்சியும் இடம் தராது தமிழக முதல்வரும் இடம் தர மாட்டார் என்பதை நான் அழுத்தமாக இங்கு பதிவு செய்கிறேன்" என பேசினார். 

மேலும் படிக்க | இது மந்திரிக்கு அழகு அல்ல - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News