மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறி வரும் வட சென்னை..!

அழகியலை தன்னுள் உள்ளடக்கிய கடலோர மீனவ கிராமங்களும் வட சென்னையின் பல பகுதிகளும் மனித குலம் வாழத்தகுதியற்ற இடமாக மாறி வருகிறது.   

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 15, 2022, 09:00 PM IST
  • வட சென்னையின் அவல நிலை
  • விஷக்காற்றை சுவாசிக்கும் மக்கள்
  • ஆயுட்காலத்தைக் குறைக்கும் பேராபத்து
மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறி வரும் வட சென்னை..!  title=

எண்ணூர் மணலியில் வெறும் 20 சதூர கிலோ மீட்டர் பகுதியில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள்,  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிகல் நிறுவனங்கள்,  உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் இரசாயன ஆலைகள்,  வாகன தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் என சூழலை பாதிக்கும் 38 அபாயகரமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் நான்கு நாட்கள் வட சென்னையின் காற்று மோசமானதை அடுத்து அது தேசிய அளிவில் மிகப்பெரும் செய்தியாக எதிரொலித்தது.ஆனால் அதே ஆண்டு 130 நாட்களுக்கு மேலாக எண்ணூர் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. மக்கள் மூச்சு திணரல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினார்கள். வட சென்னையின் இந்த நிலைக்கும் அங்குள்ள சுற்றுசூழல் மோசமாகவும் முக்கிய காரணம், 3330MW அளவுக்கு செயல்பட்டு வரும் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள்தான்.

சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105 டன் சல்பர் டை ஆக்சைடு , 24 டன் நைட்ரஜென் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள்,  மற்றும் 3.5 டன் சாம்பல் ஆகிய காற்று மாசுகள் காற்றில் வெளியேறுகிறது.3330MW அளவிலான அனல் மின் நிலையங்களில் இருந்து டன் கணக்கில் வெளியேறும் சாம்பல்கள், எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்து அப்பகுதி சூழலை கடுமையாக பாதிக்கிறது. 

மேலும் படிக்க | மனித முகம் பிடிக்காததால் ரூ.12 லட்சம் செலவு செய்து முகத்தை மாற்றிய இளைஞர்!

முக்கியமாக அப்பகுதி மீன் உற்பத்தியை குறைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குரியாக்கியுள்ளது.வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல்களினால் வாழத்தகுதியற்ற இடமாக பல பகுதிகள் மாறி வருகிறது. செப்பாக்கம் என்ற பகுதி ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்துள்ளது. ஆனால் தற்பொழுது புழு, பூச்சிகூட வாழ முடியாத பாலைவனமாக மாறியுள்ளது.கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய கருவேலம் மரங்கள் கூட இங்கு வளரவில்லை என்றால் அப்பகுதி எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

North Chennai

சமீபத்தில் வெளியாகியிருந்த ஹெல்த் எனெர்ஜி இனிசியேட்டிவ் ஆய்வறிக்கையின் மூலம் திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் ஆகிய அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் PM 2.5 நுண் துகளின் அளவுகள் உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவுகளாக நிர்னையத்துள்ள அளவுகளை விட எட்டு மடங்கு வரை அதிகமாக பதிவாகியுள்ளன.இந்த அளவிற்கு நுண்துகளால் மாசடைந்த காற்றை சுவாசித்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் சில வருடங்களை இழக்க நேரிடும் என AQLI அமைப்பின் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, பெங்களூருவை விட சென்னையில் தான் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது என சமீபத்தில் வெளியான C40 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த சூழலில்தான் புதிதாக எண்ணூரில் 660MW மற்றும் 600MW அளவுகளில் இரண்டு புதிய அனல் மின் நிலையங்கள் கட்ட தமிழ்நாடு மின் வாரியம் முயற்சி எடுத்து வருகிறது. 

மேலும் படிக்க | சென்னையில் இரண்டாவது விமான நிலையம்: இந்த நான்கு இடங்களில் வரலாம்!

இந்த திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வாழும் வடச்சென்னை பகுதியின் சுற்றுசூழல் மேலும் மாசடைந்து அது வாழ தகுதியற்ற இடமாகவே மாறிப்போகும்.ஏற்கனவே 3330 MW அளவில் அனல் மின் நிலையங்கள் இருக்கும் பொழுது மேலும் புதிதாக அனல் மின் நிலையங்களை எண்ணூரில் அமைப்பது அப்பகுதி மக்களுக்கு செய்யும் மிக பெரிய அநீதியாகும் எனவும், மின்சாரம் தயாரிக்க சூரிய ஆற்றல் , காற்றலை என பல நவீன தொழில்நுட்பங்கள் ஏற்கனவே இருக்கும் பொழுது, உற்பத்தி செலவு மிகுந்த, மக்களுக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்க கூடிய நிலக்கரியை எரித்து தான் மின்சாரம் எடுப்போம் என்பது பகுத்தறிவுக்கும், இயற்கைக்கும், மனிதத்திற்கும் எதிரான செயலாகத்தான் இருக்கும் எனவும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News