சென்னை- அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி திட்டப்பகுதிக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளை சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் (Madras urban development programme) மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் திட்டங்களின் ((Tamil Nadu urban development programme) கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்தவர்களுக்கே, அவர்களின் மனைகளுக்கு வாரியத்தால் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டிருந்தது.
அந்நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன், ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரயப்பத்திரம் வழங்கப்படும்.
சென்னை–அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி தெரு, திட்டப்பகுதி ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் இம்மாதம் (நவம்பர்) 29 ஆம் தேதி சென்னை, அண்ணா நகர் மேற்கு, ஜே.ஜே.காம்ப்ளக்ஸ் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலகத்தில் (எஸ்டேட் அலுவலகம்-3) நடைபெறவுள்ளது.
மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிகளில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிட சான்றுகளாக உணவு பங்கீடு அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்கள் இணைக்க வேண்டும்.
வாரிசுதாரர்களாக இருப்பின் ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் அசல் மற்றும் மனைக்கு முழுகிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருப்பின் கடன் தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும். கிரயப்பத்திரம் கோரும் ஒதுக்கீடுதாரர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.