புதுச்சேரி: 3 பாஜக நியமன MLA பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம்

புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே, நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2021, 07:37 AM IST
  • புதுட்ச்சேரியில் 3 நியமன MLAக்கள் நியமனம்
  • அவர்களின் பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம்
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLAக்கள் பதவியேற்காத நிலையில் நியமன MLAக்கள் பதவியேற்க அவசியம் என்ன?
புதுச்சேரி: 3 பாஜக நியமன MLA பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம் title=

அண்மையில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகள், பாஜக 6 தொகுதிகளில் வென்ற நிலையில், என்ஆர் காங்கிரசின் ரெங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 

புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பே மத்திய அரசு நியமன உறுப்பினர்களை நியமனம் செய்தது. 

மத்திய அரசின் இந்த அவசரச் செயல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்

புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே, அவசரகதியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

புதுச்சேரியில் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படும் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர, 3 பேர் மத்திய அரசால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படலாம் என 1963-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதுச்சேரி ஒன்றியப் பகுதிச் சட்டம் கூறுகிறது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு, 3 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வுசெய்து அவர்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல் இது.இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.  

சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் ஆளுநர் கிரண் பேடி நேரடையாக 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்து அவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்ததும், அந்த நியமன சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டே மக்களால் தேர்வுசெய்யப்பட்ட காங்கிரசு கட்சி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த சனநாயகப் படுகொலையை மீண்டும் அரங்கேற்றத் துடிக்கும் பாஜக அரசின் சதிச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

Also Read | கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

புதுச்சேரி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயா ரங்கசாமி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதால் புதுச்சேரியில் பதவியேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டப்பேரவைத் தலைவரே தேர்வுசெய்யப்படாத நிலையில், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்காத நிலையில் நியமன உறுப்பினர்கள் அவசரகதியில் நியமிக்கப்பட்டது ஏன்?

மத்திய அரசின் இந்த செயல் மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். அதுவும் துறைசார்ந்த வல்லுனர்களை நியமிக்காது பாஜகவைச் சேர்ந்தவர்களையே சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

முதல்வர் ரங்கசாமி பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறபோதும் அவரைக் கலந்தாலோசிக்காது, அவரது உடல்நலமின்மையைத் தங்களுக்குச் சாதகமாக்கி நியமன உறுப்பினர்கள் மூலம் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மக்களால் தேர்தெடுக்கப்படும் அரசைக் கட்டுப்படுத்துவதும், ஆட்சியின் நிலைத்தன்மையைக் குலைப்பதும், கவிழ்ப்பதுமென செயல்பட முனையும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் சனநாயகத்துரோகமாகும்.

Also Read | சென்னை மண்டலங்களுக்கு தலா 3 கோவிட் சிறப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்

கொரோனா நோய்த்தொற்று நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்திலும்கூட கள்ளத்தனமாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக அரசின் அரசியல் நடவடிக்கை மிகக் கீழ்த்தரமானதாகும்.  

எனவே, ஜனநாயக மரபுகளையும், மாண்புகளையும் கடைப்பிடித்து நியமன உறுப்பினர் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | CM MK stalin: உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News