அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருக்கும் சூழலில் அது தொடர்பான விசாரணை நாளை நடக்கவிருக்கிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 20, 2022, 06:25 AM IST
  • ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
  • இபிஎஸ்ஸும் பதில் மனுத்தாக்கல்
  • உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவிருக்கிறது
அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை title=

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும். இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என கோரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஓபிஎஸ் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கு பதில் மனு இபிஎஸ் தரப்பில் தாக்கல் உச்ச நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு கட்சி விதிப்படி முறையாக நோட்டீஸ் அளிக்கப்படவில்லை, அந்த நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன் அனுப்பப்படவில்லை. எவ்வித அதிகாரமும் இல்லாதவர்களை கொண்டு பொதுக்குழு நடத்தப்பட்டதாக மனுதாரர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தை போலவே ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டமும் முறைப்படி கூட்டப்பட்டது.

மேலும் படிக்க | சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் ஆண்டுக்கு ஒருமுறை மூடப்படுவது ஏன்? பின்னணி

பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும், பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யவும், பொதுச்செயலாளர் நியமிக்கப்படும்வரை, அவரின் பணிகளை தொடரும் வகையில் இடைக்கால பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யவும், 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தவும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கவும், குறிப்பாக கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்யவில்லை. மாறாக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி மட்டும்தான் மனு தாக்கல் செய்தார். எனவே, உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கட்சியின் உறுப்பினர்களை சட்டவிரோத கோஷ்டி, கட்சியை பலவந்தமாக கைப்பற்றவே இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். இதை தெரிந்துகொண்டே ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை சிலர் மட்டுமே கொண்ட குழு என தெரிவித்துவருகிறார். 

2021 டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர பதவிகள் குறித்த கட்சி விதிகள் திருத்தம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுக்குழுவின் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த திருத்தங்கள் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறாததால், நடைபெற்ற தேர்தலும் காலாவதியாகி விட்டது. எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர பதவிகள் புதுப்பிக்கப்படாததால், அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டன. செயற்குழுவில் இயற்றப்படு்ம் தீர்மானங்கள் அனைத்திற்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துவது முரணாக உள்ளது. எனவே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வைரமுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரப்பட்டிருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News