ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல்: முன்னாள் முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மண்ணின் மைந்தன் என்று அதிமுக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திற்கு பெரிய அளவிலான என்ன திட்டங்களை செய்தார் என்பது மக்களுக்கு தெரியும்: திமுக

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2022, 04:10 PM IST
  • ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல்.
  • முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது குற்றச்சாட்டு.
  • அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது: யாதவ மூர்த்தி
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல்: முன்னாள் முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு title=

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்து விட்டதாக அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

சேலம் மாநகராட்சி மன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் ஆளும் கட்சித் தலைவர் ஜெயக்குமார் மன்ற தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து தீர்மானங்களுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கைதட்டி ஆதரவை தெரிவித்தனர்.

இதனையடுத்து மன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மேயர் கேட்டுக்கொண்டதையடுத்து தங்கள் பகுதியில் நிலவும் குறைபாடுகள் மற்றும் கோரிக்கை குறித்து மன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.

இதையடுத்து மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை வீடுகளுக்குச் சென்று பிரித்து சேகரிப்பதற்காக கடந்த ஆட்சி காலத்தில்  179 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த பேட்டரி வாகனங்கள் தற்போது பழுதடைந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆண்டு பராமரிப்புக்கான எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு காரணமான கடந்த ஆட்சியாளர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இது குறித்த ஒரு விரிவான அறிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க | Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 26, 2022) 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் இது இந்த திட்டம் முற்றிலும் அதிகாரிகளால் திட்டம் வகுக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து முதலில்  தீர விசாரிக்க வேண்டும் என்றும் இதற்கு ஆட்சியாளர்களை குற்றம் சுமத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மண்டல குழு தலைவர் உமாராணி கடந்த ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டம் என்றுதான் சொல்ல முடியுமே தவிர வேறு எந்த ஆட்சி காலத்தில் போடப்பட்டது என்று கூறமுடியும் என்றும் அவ்வாறு திட்டம் வகுத்து செயல்படும்போது திட்டத்தை முறையாக செயல்படுத்த முறையான வழிகாட்டுதல்கள் இல்லை என்றும் இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை அறியவே இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலம் மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் துவக்கப்பட்டன. இந்த திட்ட பணிகளில்  ஆயிரம் கோடியில் 200 அல்லது 300 கோடி ரூபாய்க்கு மட்டுமே திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அளவுக்கு கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மண்ணின் மைந்தன் என்று அதிமுக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திற்கு பெரிய அளவிலான என்ன திட்டங்களை செய்தார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட திட்டங்கள்தான் மக்களை தற்போது காப்பாற்றி வருவதாகவும் கூறினார். 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் அதிகாரிகள் செய்த தவறுக்கு ஆட்சியர்கள் குற்றம் சாட்டுவது சரியல்ல என்றும் மாநகராட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை ஆவணங்களை சரிபார்த்தால் தெரியும் என்றும் கூறினார். அப்போது திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்க்கட்சி உறுப்பினர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதற்கு பதிலளித்துப் பேசிய மாநகராட்சி மேயர்,  சேலம் மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கூச்சல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

 குறிப்பாக சேலம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் இருக்கைக்கு அருகில் துணைமேயர் இருக்கை அமைக்க வேண்டும் என பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை புகார்கள் வந்ததை அடுத்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேயர் இருக்கைக்கு அருகிலேயே துணைமேயர் இருக்கை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | பிரதமருக்கு காவி குடை பிடிக்கும் திமுக? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News