கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு

இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது என்று மருத்துவர் இராமதாசு தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

Last Updated : Apr 7, 2021, 11:05 AM IST
  • கொரோனா வைரசை தடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார்.
  • இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது-மருத்துவர் இராமதாசு .
  • பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்-மருத்துவர் இராமதாசு.
கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு title=

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் மிக அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், கொரோனா வைரசை தடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அதற்கு மக்கள் அளிக்க வெண்டிய ஒத்துழைப்பைப் பற்றியும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார். 

“தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் 3645 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 450 என்ற அளவுக்கு குறைந்திருந்தது. அதனால் ஏப்ரல் மாதத்தில் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலையாகிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தான் கொரோனா பரவல் வேகம்  பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 6 ஆம் தேதி தினசரி கொரோனா பரவல் 562 மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவு 648% அதிகரித்திருக்கிறது. கடந்த  ஆண்டு தினசரி கொரோனா பரவல் 562-லிருந்து 3645 ஆக அதிகரிக்க 56 நாட்கள் ஆயின. ஆனால், இப்போது 30 நாட்களில் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்த உண்மையை பொதுமக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

ALSO READ: சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கொரோனா (Coronavirus) பரவல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக் கூட கடைபிடிக்காதது தான் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு காரணம் ஆகும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட எவரும் முகக் கவசம் அணியாதது தான் கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததற்கு காரணம் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகளும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.

கொரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டின் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தான் அரசின் முதற்கடமையாக இருக்க வேண்டும். ஒருபுறம் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி (Vaccine),  மறுபுறம் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைபிடிப்பதன் மூலம் நோய்ப்பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவது என்ற இரு முனை அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. தமிழக அரசின் நோய்ப்பரவல் தடுப்பு  நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலமாக மட்டுமே  கொரோனா வைரஸ் பரவல் வேகத்தை முழுமையாக குறைத்து நோயை முற்றிலுமாக போக்க முடியும்.

தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு கூறி விட்டது. அதற்கு மாற்றாக தேவையற்ற விஷயங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் வரை, ஒரு முறை வெளியில் செல்ல வேண்டுமென்றாலும் கூட, அத்தகைய பயணம் அவசியம் தானா? என நூறு முறை சிந்திக்க வேண்டும். ஒருவேளை தவிர்க்க முடியாமல் வெளியில் செல்ல வேண்டுமென்றால் கூட முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியை அடிக்கடி  கைகளை தெளித்துக் கொள்ளுதல், பொது இடங்களில் குறைந்தபட்சம் இரு மீட்டர் இடைவெளி விடுதல், வெளியில் சென்று வீடு திரும்பியதும் கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க இது மிக அவசியமாகும்.

பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பிறகும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அபராதம் விதிப்பதோ, பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோ தண்டிப்பதற்காக அல்ல.... கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து தங்களையும் காப்பாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகத் தான் என்பதை பொது மக்கள் உணர வேண்டும். அரசு, மக்கள் என அனைவரும் கைகோர்த்து கொரோனா என்ற பெருந்தீமையை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும்.” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: தாயாய் மாறிய கான்ஸ்டபிள்: டிரெண்ட் ஆகி பாராட்டைப் பெறும் கான்ஸ்டபிளின் செய்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News