காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை உடைப்பு; குற்றவாளியை தண்டிக்க வேண்டும்!

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!

Last Updated : Jan 24, 2020, 12:14 PM IST
காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை உடைப்பு; குற்றவாளியை தண்டிக்க வேண்டும்! title=

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரியார் சிலையின் கைப்பகுதி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் பற்றி ரஜினி பேசியதை அடுத்து, தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகள் நடந்தன. ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் நிற்க, ரஜினியின் கருத்துக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நின்றன.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலை இன்று உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்... "காஞ்சிபுரம் மாவட்ட சாலவாக்கத்தை அடுத்த கலிப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்பட்டுள்ள இந்த வெறுப்புச் செயல் கண்டிக்கத்தக்கது.

அண்மைக்காலமாகவே தந்தைப் பெரியார், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் சிலைகளை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு சாராரின் வக்கிர உணர்வையே வெளிப்படுத்துகிறது.  தந்தை பெரியாரின் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், அதை கொள்கைகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். மாறாக, பெரியாரின் சிலைகளை சேதப்படுத்துவது, அவமதிப்பது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய செயல்களால் தந்தை பெரியாரை எவராலும் சிறுமைப்படுத்த முடியாது. மாறாக, இதை செய்தவர்கள் தான் சிறுமைப்பட்டு போவார்கள்.

கலிப்பட்டு கிராமத்தில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறை கைது செய்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். இனி இத்தகைய செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

Trending News