திருப்பூரில் பயங்கரம்: பணத்திற்காக கல்குவாரி அதிபர் லாரியில் கடத்திக் கொலை!!

லாரியிலிருந்து ஒருவர் திடீரென குதித்து தப்பியோடினார். அவரை 5 கி.மீ விரட்டிச்சென்று கரூர் போலீசார் பிடித்தனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2021, 10:00 AM IST
திருப்பூரில் பயங்கரம்: பணத்திற்காக கல்குவாரி அதிபர் லாரியில் கடத்திக் கொலை!! title=

திருப்பூர் மாவட்டம், சின்னகவுண்டன் வலசை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் கரூர் மாவட்டம் கூனம்பட்டியில் கல்குவாரி நடத்தி வருகிறார். எப்பொழுதும் போல் கடந்த 6 ஆம் தேதி இரவு சாமிநாதன் குவாரியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சாமிநாதனின் மருமகன் முருகேசன் போனுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், 'என்னை கடத்திவிட்டனர் (Kidnapping) என்னை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் கேட்கின்றனர்' என சாமிநாதனை பேச வைத்து அனுப்பியிருந்தனர் கடத்தல்காரர்கள். 

குவாரியின் மேலாளர் குவாரிக்கு சென்று பார்த்த போது அவர் இல்லாததாலும், மேலும், சாமிநாதனின் காலணி மற்றும் இருசக்கரவாகனம் மட்டும் அங்கு இருந்ததாலும், அங்கு பதட்டம் ஏற்பட்டது. மேலாளர் மூர்த்தி சாமிநாதனின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. மேலும் குவாரியில் நிறுத்தியிருந்த டிப்பர் லாரியும் அங்கு இல்லாததால் மேலாளர் மூர்த்திக்கும் சந்தேகம் ஏற்பட்டதால் அவரும் சாமிநாதனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து, தென்னிலை போலீசில் அளித்த புகார் அளிக்கப்பட்டது. கரூர் டி.எஸ்.பி., முத்தமிழ்செல்வன் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களை தேடிவந்தனர். இதற்கிடையே சாமிநாதனின் மொபைல் போனின் சிக்னலை வைத்து தேடியபோது சேலம் மாவட்டத்தில் உள்ளது தெரிந்தது. இதனால் கரூர் மாவட்ட போலீசார் சிக்னல் பதிவாகிய  வாழப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேடிவந்தனர்.

ALSO READ | Police: சினிமா பாணியில் கள்ளநோட்டு கும்பலை துரத்தி பிடித்த தமிழக போலீஸ்

இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் சந்தேகத்துக்கிடமான லாரி ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. அவ்வழியாக ரோந்து சென்ற தலைவாசல் போலீஸார் லாரியின் அருகில் சென்றனர். அப்போது லாரியிலிருந்து ஒருவர் திடீரென குதித்து தப்பியோடினார். அவரை 5 கி.மீ விரட்டிச்சென்று கரூர் போலீசார் பிடித்தனர். மற்றொருவரும் ஓட முயன்றபோது அவரை தலைவாசல் போலீசார் பிடித்து லாரியில் சோதனை செய்தனர். அப்போது சாமிநாதன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கரூரை சேர்ந்த டிரைவர் விஜய் மற்றும் நவீன் என்பதும், அவர் அதே குவாரியில் பணிபுரிவதும் தெரியவந்தது. பணம் கேட்டு கடத்தி வந்தவர்கள் காரில் சென்றதாக நினைத்திருந்த நிலையில் அவர்கள் லாரியிலேயே சாமிநாதனை கடத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் சாமிநாதனின் குடும்பத்தினர் பணம் தராமல் போலீசில் புகார் அளித்ததாலும் தங்களை காட்டி கொடுத்துவிடுவார்கள் என்பதாலும் சாமிநாதனை கடத்திய கும்பல் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். 

போலீசாரிடம் சிக்காமல் இருக்க தேவியாக்குறிச்சியில் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதிக்குள் நள்ளிரவில், உடலை தீ வைத்து எரிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் (TN Police) ரோந்து பணியின்போது சந்தேகமடைந்து விசாரித்ததில், இறந்தவரது உடலுடன் குற்றவாளிகளும் சிக்கினார்கள். மேலும் இந்த கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என பிடிப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ALSO READ | கண்ணீர்மல்க போராடிய மீனவ மூதாட்டி - அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News