செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி!

செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி சென்னையை சேர்ந்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 27, 2021, 08:32 AM IST
செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி! title=

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன்கள் விக்னேஷ் (29), யோகேஷ் (23). சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கோதண்டராமன் மகன் ஹரீஷ் (23), காரைக்காலை சேர்ந்த செல்லையா மகன் கணேஷ் (21). உறவினர்களான இவர்கள் 4 பேரும் பட்டதாரிகள் ஆவர்.

இந்தநிலையில் இவர்கள் கோவை, பழனிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அவர்கள் கோவைக்கு சென்றனர். அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர். பின்னர் ரெயில் மூலம் நேற்று பழனிக்கு வந்தனர்.

மதியம் 3 மணி அளவில் ஆட்டோ மூலம் பழனி அருகே, கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள வரதமா நதி அணைக்கு அவர்கள் சென்றனர். 66 அடி உயரம் கொண்ட அந்த அணை தற்போது நிரம்பி உள்ளது. 

ALSO READ | முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 17வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை

தண்ணீர் ததும்பிய அணையின் எழில் கொஞ்சும் காட்சியை அவர்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு அவர்கள் 4 பேரும் அணையில் இறங்கி தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். 

அப்போது திடீரென்று கணேஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விக்னேசும், யோகேசும் அவரை காப்பாற்றுவதற்காக அணையின் ஆழமான பகுதிக்கு சென்று தேடினர். 

சிறிது நேரத்தில் அவர்களும் நீரில் மூழ்கினர். இதனால் செய்வதறியாது தவித்த ஹரீஷ் அணையின் கரை பகுதிக்கு ஓடிவந்து, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினார்.

ALSO READ | கணவரை கொன்று டிரம்பில் உடலை அடைத்து வைத்த மனைவி!

சத்தம் கேட்டு அணை பகுதியில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் இது குறித்து பழனி தீயணைப்பு நிலையம் மற்றும் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், ஆயக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் அணையில் இறங்கி, ரப்பர் டியூப் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

சில மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கிய அவர்கள் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது

இதனையடுத்து 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதி கொடைக்கானல் போலீஸ் எல்லைக்கு உட்பட்டதால் கொடைக்கானல் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘செல்பி’ எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் பழனி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ALSO READ | காவல் நிலையம் அருகே கொள்ளையர்களின் கைவரிசை: அழகாபுரத்தில் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News