வெள்ளை மாளிகைக்கு புடின்-னை ரகசியமாக அழைத்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, சந்திக்க கடந்த மாதம் அழைப்பு விடுத்தது தெரிய வந்துள்ளது. ஆனால், தேதி குறிப்பிடவில்லை! 

Last Updated : Apr 3, 2018, 06:59 AM IST
வெள்ளை மாளிகைக்கு புடின்-னை ரகசியமாக அழைத்த ட்ரம்ப் title=

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, சந்திக்க கடந்த மாதம் அழைப்பு விடுத்தது தெரிய வந்துள்ளது. ஆனால், தேதி குறிப்பிடவில்லை! 

புடின் தேர்தலில் வென்ற சில நாட்களில், ட்ரம்ப் அவரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார். அப்போது ரஷ்ய தேர்தலில் பல்வேறு மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ட்ரம்ப்பின் ஆலோசகர்கள்  புடினுடன் பேசும்போது, அவரை வாழ்த்த வேண்டாம் என எச்சரித்திருந்தனர். 

ஒரு பெரிய அட்டையில், "வாழ்த்தாதீர்கள்" என எழுதி கூட ட்ரம்ப் முன் வைத்ததாக தகவல்கள் வெளியாயின. ஆனால், அதையும் மீறி புடினின் வெற்றிக்கு ட்ரம்ப் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், அப்போது முன்னாள் ரஷ்ய உளவாளியை பிரிட்டனில் வைத்து ரஷ்ய உளவுத்துரை ரசாயன விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. முன்னதாக ட்ரம்ப் தேர்தலில் வெல்ல, அவருக்கு ரஷ்ய ஹேக்கர்கள் உதவியதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்த நிலையில், ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளை ட்ரம்ப் சம்பந்தப்பட்ட பலர் தேர்தலின் போது ரகசியமாக சந்தித்ததும் தெரிய வந்தது. ட்ரம்ப்புக்கும் புடினுக்கும் பல தொடர்புகள் உள்ளதாக அறிகுறிகள் உள்ளன. தேர்தலின் போது, வேண்டுமென்றே ட்ரம்ப் சம்பந்தப்பட்டவர்கள் ரஷ்யாவுடன் தொடர்பு வைத்தார்களா என சிறப்பு விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், புடினை ட்ரம்ப் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தது தெரிய வந்துள்ளது. ரஷ்ய அதிகாரி ஒருவர், ட்ரம்ப் கடந்த மாதம் புடினிடம் போனில் பேசிய போது, நேரில் சந்திக்க வெள்ளை மாளிகை வர அழைப்பு விடுத்ததாக கூறினார். இதுகுறித்து ட்ரம்ப் தரப்பு இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில், தற்போது வெள்ளை மாளிகை இதை உறுதி செய்துள்ளது. புடினை நேரில் சந்திப்பது குறித்து அன்று ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் நடந்த ரஷ்ய உளவாளியின் கொலை முயற்சி விவகாரத்தில் தற்போது இரு நாடுகளும், தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த சந்திப்பு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.

Trending News