காஷ்மீரில் நிலவி வரும் சூழல் என்ன? -உமர் அப்துல்லா ஆவேசம்!

காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 3, 2019, 02:51 PM IST
காஷ்மீரில் நிலவி வரும் சூழல் என்ன? -உமர் அப்துல்லா ஆவேசம்! title=

காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களில் பாகிஸ்தான் துப்பாக்கித் தொழிற்சாலை அடையாளங்களும் அமெரிக்கத் தயாரிப்பு துப்பாக்கியும் இருந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் கெடுக்கும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் தற்போது அமர்நாத் புனித யாத்திரையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று லெப்டினண்ட் ஜெனரல் கன்வல்ஜீத் சிங் தில்லான் தெரிவித்தார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இங்கு தங்கியுள்ள அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் உடனடியாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் என அம்மாநில அரசு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதைத்ததொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தலைமையில் இன்று ஆளுநர் சத்தியபால் மாலிக்கை சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்., "காஷ்மீரில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசினோம். தீவிரவாத தாக்குதல் இருப்பதால் சில முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மற்றபடி அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. சட்டங்களை மாற்றும் திட்டமும் இல்லை என தெரிவித்தார். ஆனால் என்ன நடக்கிறது என்ற உண்மையான தகவலை யாரும் சொல்ல மறுக்கிறார்கள்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெறும் சூழலில் அங்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது உட்பட அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Trending News