இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியதில் தவறில்லை: கமல்!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : May 17, 2019, 09:32 AM IST
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியதில் தவறில்லை: கமல்! title=

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். வேலாயுதம்பாளையத்தில் அவர் தனது பிரசாரத்தை நிறைவு செய்வதாக இருந்தார். அங்கு அவர் பேசிய போது, கூட்டத்தில் இருந்த மூன்று பேர் , திடீரென காலணியை வீசி எறிந்தார். கமல் மீது காலணி, முட்டை உள்ளிட்டவை வீசப்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் பொருட்களை வீசியவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொருட்களை வீசியவர்களை பிடித்து கைது செய்ய முயன்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் கூட்டத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்; வாலையும், தலையும் கத்தரித்து போட்டால் யாரும் யாரையும் குற்றஞ்சொல்ல முடியும். பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். சரித்திரம் பதில் சொல்லும்.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை. இது உருவான சர்ச்சை அல்ல. உருவாக்கப்பட்ட சர்ச்சை. கோட்சே குறித்து முன்பே பேசியுள்ளேன். தேர்தலில் வெற்றி நம்பிக்கை குறைந்ததால் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். மெரினாவில் பேசியபோது கண்டுகொள்ளாத நிலையில் அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்தி விட்டனர். சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்திருப்பதிலும் அரசியல் உள்ளது. 

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது. கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை. பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் முன்ஜாமின் கோரினேன்.

 

Trending News