காற்றில் பறந்தபடி கேட்ச் பிடித்து கெத்து காட்டிய ஹர்திக் பாண்டியா: வீடியோ

காற்றில் பறந்தபடி கேட்ச் பிடித்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2019, 03:58 PM IST
காற்றில் பறந்தபடி கேட்ச் பிடித்து கெத்து காட்டிய ஹர்திக் பாண்டியா: வீடியோ title=

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுன்கனேய் பே ஓவல் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நியூசிலாந்து அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 243 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 43 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா.

முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து விளையாடிய போது, 17வது ஓவரை இந்திய பந்து வீச்சாளர் யூசுவெந்திர சஹால் வீசினார். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 47 பந்தில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பந்தை எதிர்கொண்டார். அப்பொழுது அவர் பந்தை அடித்து ஆட, அந்த பந்தை காற்றில் பறந்தபடி இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அழகாக கேட்ச் பிடித்தார். இதை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். 

 

முன்னதாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் "காஃபி வித் கரண்" நிகழ்ச்சியில் ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்ட போது பெண்களை பற்றி கூறிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சனவரி 24 ஆம் தேதி தடையை நீக்கியது பிசிசிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News