CSK Champion: 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்..! தோனி ஆனந்த கண்ணீர்

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 30, 2023, 01:52 AM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்
  • 5வது முறையாக கோப்பையை வென்றது
  • ஜடேஜாவை கட்டிப்பிடித்து தோனி ஆனந்த கண்ணீர்
CSK Champion: 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்..! தோனி ஆனந்த கண்ணீர் title=

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பவுலிங் தேர்வு செய்தார். மழை குறுக்கீடு இருக்கலாம் என்பதால், அதனை மனதில் வைத்து பவுலிங் எடுத்தார். குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்போது கூட, டாஸ் வெற்றி பெற்றிருந்தால் நாங்களும் பவுலிங்கையே எடுத்திருப்போம், ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை பற்றி கவலைப்படத் தேவையில்லை. பேட்டிங் சிறப்பாக விளையாடுவோம் என கூறினார். அவர் கூறியது போலவே 20 ஓவர்களும் குஜராத் அணி அதிரடியாக விளையாடி 214 ரன்கள் குவித்தது. 

கில் - சஹா சிறப்பான தொடக்கம்

சூப்பர் பார்மில் இருக்கும் சுப்மான் கில் மற்றும் விருதிமான் சஹா ஆகியோர் வழக்கம்போல குஜராத் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் 2 ஓவர்கள் மெதுவாக தொடங்கினாலும், 3வது ஓவரில் இருந்து டாப் கியரில் அடிக்க ஆரம்பித்து ரன்களை எடுக்கத் தொடங்கினர். தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே இருவரின் ஓவர்களிலும் சிக்சரும் பவுண்டரிகளுமான விளாச தொடங்கினர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியது. 6.6 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது. 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசியிருந்த சுப்மான் கில், தோனியின் அசத்தலான ஸ்டம்பிங் மூலம் அவுட்டானார்.

மேலும் படிக்க | மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்?

தமிழக வீரர் சுதர்சன் சரவெடி 

கில் அவுட்டானாலும் விருதிமான் சஹா சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்தார்.39 பந்துகளில் 54 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகளும் 1 சிக்சர்களும் விளாசி அவுட்டானார். ஓப்பனிங் இறங்கிய இருவரும் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் வெளுத்து வாங்கினார். கிடைக்கும் பந்துகளையெல்லாம் பவுண்டரியும் சிக்சருமாக விளாசிய அவர், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 96 ரன்கள் எடுத்திருந்தபோது பத்திரனா பந்தில் எல்பிடபள்யூ என்ற முறையில் அவுட்டானார். இதில் 6 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவே தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடியிருந்தாலும், ரசிர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 

சிஎஸ்கேவுக்கு மெகா இலக்கு நிர்ணயம் 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி இமாலய ஸ்கோரை நிர்ணயித்தது. 20 ஓவர்களை விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. கடைசி வரை விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றலாம் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது பேட்டிங் களமிறங்கியது.

சென்னை அணியின் மழை குறுக்கீடு

பின்னர் சென்னை அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. 3 பந்துகள் வீசப்பட்டபோது சிஎஸ்கே 4 ரன்கள் எடுத்திருந்தது. மழை கொஞ்சம் தீவிரமாக பெய்ததால் போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கியது. அதன்படி 171 ரன்களை 15 ஓவர்களுக்குள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் அதிரடியாக ஆரம்பித்தனர். இதனால் 4 ஓவர்களில் சென்னை அணி 50 ரன்களை கடந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ருதுராஜ் 26 ரன்களுக்கும், கான்வே 47 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மகுடம்

ஆனால் அடுத்து வந்த பிளேயர்களும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விட்ட இடத்தில் இருந்து அடித்து விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது. குறிப்பாக ஷிவம் துபே மற்றும் ராயுடு ஆகியோர் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச தொடங்கினர். கடைசி போட்டியில் விளையாடிய ராயுடு 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த தோனி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் என தேவைப்பட்டபோது களத்தில் இருந்த ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி சிஎஸ்கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. ஜடேஜா வெற்றி ரன்களை அடித்தவுடன் கண்ணீர்விட்ட தோனி, ஜடேஜாவை தூக்கி கொண்டாடினார்.

மேலும் படிக்க | CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News