தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்: திருச்சியில ஐஜேகே மாநாடு... திரளாக கூடிய மக்கள்

தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டதால் தமிழர்களின் கலையான பாரிகும்மி, உருமி மேளம் போன்றவற்றின் பெருமைகளை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2024, 04:52 PM IST
  • 14 ஆண்டுகளுக்கு முன்பே இலவசம் தவிர்ப்போம் என்று பாரிவேந்தர் கூறினார்: டாக்டர் ரவி பச்சமுத்து
  • எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் அனைவரும் உயர்ந்த நிலையை அடைவார்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர்
  • தமிழை ஐநா சபைக்கு எடுத்துச் சென்று உலகம் முழுவதும் பரப்பியவர் மோடி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்: திருச்சியில ஐஜேகே மாநாடு... திரளாக கூடிய மக்கள் title=

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சி சிறுகனூரில், தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற தலைப்பில் பிரமாண்டமாக மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொண்டர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது தொண்டர்கள் கூட்டம் இல்லை என செய்தி வெளியானது. இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன? 

சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள், ஊடகங்களை  நடத்தும் பாரிவேந்தர் தொடங்கிய கட்சி தான் ஐஜேகே. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி ஆனார். மற்றவர்கள் போல் சம்பாதிக்க கட்சி தொடங்காமல், தான் சம்பாதித்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொகுதியில் பல மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டவர், பல ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கியுள்ளார். தான் நடத்தும் மருத்துவமனைகளில் பலருக்கு இலவச சிகிச்சை வழங்கி பலரது உயிரை காப்பாற்றியுள்ளார். அது மட்டுமல்ல தனக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி நிதியை விட பல கோடிகளை தொகுதிக்காக செலவிட்டுள்ளார். இதனை அண்ணாமலையே புள்ளி விவரங்களுடன் 126 கோடி 90 லட்சத்து 11ஆயிரத்து 400 ரூபாய் என மேடையில் குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தினார். தான் தொகுதிக்கு செய்த விஷயங்களை புத்தகமாக தொகுத்துள்ளார். 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதனை கருத்தில் கொண்டு தொகுதி மக்களை வரவழைத்து தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தினார். இதில் குறிப்பாக பெரம்பலூர் தொகுதிக்குள் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளான குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர்  பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டதால் தமிழர்களின் கலையான பாரிகும்மி, உருமி மேளம் போன்றவற்றின் பெருமைகளை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒவ்வொரு நிகழ்வையும் கண்டு ரசித்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே கட்சியும்  அங்கம் வகிப்பதால் பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, புதிய நீதி கட்சி சண்முகம், காமராசர் மக்கள் கட்சி தமிழருவி மணியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர் தேவநாதன் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் எம்.பி. பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து, மாநாடுக்கு தலைமை வகித்தனர்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களிடம் பேசியபோது, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்த மோடி பிரதமராக உயர்ந்தார். அவர் மட்டுமல்ல  எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் அனைவரும் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்பது உறுதி என்று கூறினார். எங்கு சென்றாலும், திருக்குறளையும், நாலடியாரையும் மோடி பெருமைபட பேசி வருவதால், மோடியின் முன்னோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என எண்ணுகிறேன் என்றார். மோடி பிரதமர் ஆவார் என்பதை 6 மாதத்திற்கு முன்பே அவரிடம் சொன்னேன். அதே போல் அவர் பிரதமர் ஆனார். தமிழக முதல்வரும், அவரின் சகாக்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவது எனக்கு மன வேதனையை தருகிறது. ஊழல் கொரோனாவை விட கொடியது. எனவே, ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் செய்பவர்கள் ஜனநாயகத்தையே வேரறுத்து விடுகிறார்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை சிந்திக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இவை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஐ.ஜே.கே-வின் கொள்கை  என வீரமுழக்கமிட்டு தொண்டர்களை எழுச்சி பெற செய்தார்.

உங்களுக்கு ஒரு அடையாளம் வேண்டுமா? ஐஜேகே வாங்க 

ஐஜேகே மாநில மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து, 14 ஆண்டுகளுக்கு முன்பே  இலவசம் தவிர்ப்போம் என்று பாரிவேந்தர் கூறியதாக சொன்னவர், உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை உங்களால் வாங்க முடிந்தது என்றால் இலவசம் எதற்கு? என கேள்வி எழுப்பினார். தன்மானம் உள்ளவர் எதற்கும் கை நீட்ட மாட்டார். அப்படிபட்டவர்களுக்கு  ஒரு கட்சி வேண்டும் என்றால் அதுதான் இந்திய ஜனநாயக கட்சி என்றும் அவர் கூறினார். உங்களுக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்றால் இந்திய ஜனநாயக கட்சிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்த டாக்டர் ரவிபச்சமுத்து,  ஐஜேகே உங்களுக்கு தேவை என்னவென்று அறியும் எனவும், அதனை தாங்கள்  செய்து கொடுப்போம் எனவும் கூறினார். உடனே ஏதாவது இலவசத்தை வாங்கி கொடுப்போம் என்று நினைக்காதீர்கள் என தெரிவித்த அவர் , உங்களை சுயமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்திய ஜனநாயக கட்சிக்கு உண்டு எனவும் கூறினார். இந்திய ஜனநாயக கட்சி என்பது  சுயநலத்துக்காக தொடங்கப்பட்டதோ, ஏதோ ஒரு பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட கட்சியோ அல்ல என தெரிவித்த டாக்டர் ரவி பச்சமுத்து, தான் பெற்ற இன்பம் பெற வேண்டும் என பாரிவேந்தர் நினைத்து தொடங்கிய கட்சி இது என பெருமிதம் தெரிவித்தார்.

தமிழை ஐநா சபைக்கு எடுத்துச் சென்று உலகம் முழுவதும் பரப்பிய மோடி

இதனைத் தொடர்ந்து, இறுதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நமது தாய் மொழியான தமிழ் மூத்த மொழியாக, உலகத்தின் தொன்மையான மொழியாக இருந்தாலும் கூட தமிழ் கலாசாரத்தை இன்னும் முழுமையாக நாம் பார்க்கவில்லை. அதற்கு இங்கு இருக்கக்கூடிய அரசியல் அனுமதிக்கவில்லை. அதை காண்பிப்பதற்கும் அரசியல்வாதிகள் தயாராக இல்லை. தொன்மையான தமிழ் மொழியை பாதுகாக்க நரேந்திர மோடி தேவைப்படுகிறார். தமிழ் மொழியை கூட்டிலிருந்து விடுவித்து, அதனை ஐநா சபைக்கு எடுத்துச் சென்று உலகம் முழுவதும் பரப்புவதற்கு மோடி தேவைப்படுகிறார். உலகம் முழுவதிலும் தொன்மையான தமிழ் மொழியின் கலாசாரத்தையும், இந்த மண்ணின் தன்மையையும் படம்பிடித்து காட்டுவதற்கும் ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி!

இந்தியாவில் நீங்கள் எந்த மொழி பேசினாலும் கூட திருக்குறளை கட்டாயமாக படிக்க வேண்டும் என்கிறார் மோடி. மோடி வாழ்க்கையில், அரசாட்சியில் அவருக்கு எழக்கூடிய கேள்விகளுக்கும் கூட திருக்குறள் பதில் அளிக்கிறது என்கிறார் மோடி. ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகட்டும், தமிழ் மொழியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதாகட்டும், பத்தாண்டு காலமாக நம்முடைய தமிழ் கலாசாரத்தின் மாண்பையும், பெருமையையும் இந்திய மக்களும், உலக மக்களும் காண உள்ளனர்.

பிஞ்சு போன செருப்பு வேலைக்கு ஆகாது!

வரும் 2026 தேர்தலில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலரும் பொழுது தமிழ் கலாசாரத்தின் தொன்மை புரிந்து கொள்ளப்படும். ஆளும் தி.மு.க அரசு தங்களுடைய 33 மாத கால சாதனையை சொல்லி வாக்கு கேட்பதற்கு தயாராக இல்லை. அவ்வாறு சாதனைகளை கூறாமல் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 1960 ஆம் ஆண்டு வாக்கில் பேரறிஞர் அண்ணாதுரை வடக்கு, தெற்கு என தான் பேசி வந்த பிஞ்சு போன செருப்பை அப்போதே தூக்கி வீசிட்டார். ஆனால், ஸ்டாலினோ, அண்ணாவால் தூக்கி வீசப்பட்ட அந்த பிஞ்சு போன செருப்பை எடுத்து போட்டுக் கொண்டு 2024 - ல் மறுபடியும் வடக்கு, தெற்கு என அரசியல் பேசுவதற்கு வந்திருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளப் போகிறார். இந்த பிஞ்சு போன செருப்பு வேலைக்கு ஆகாது. என்று வீசி எறியப்பட்ட செருப்பை மறுபடியும் தி.மு.க அணிந்து கொண்டு 2024 தேர்தல் களத்திற்கு வரும்பொழுது தி.மு.க என்கிற கட்சி இல்லாமல் போகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்று பேசினார். 

பாஜக மேலிட தலைவர்களும் மற்றும்  அண்ணாமலையும் திமுக பற்றியும் இந்தியா கூட்டணியை பற்றியும், அதன் தலைவர்களை ஒவ்வொரு மேடையிலும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும்.  அண்ணாமலையின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒரு சில ஊடகங்கள் திட்டமிட்டு அண்ணாமலை  பேசும் போது பார்வையாளர்கள் இல்லை என்பது போன்று காலியான நாற்காலிகளை காட்டி ஜோடித்து  மாநாட்டை பற்றி தவறான செய்தியை ஒளிப்பரப்பி உள்ளதாக சொல்கிறார்கள் களத்தில் இருந்த பார்வையாளர்கள்.

மேலும் படிக்க | போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரை காணவில்லை... பாஜக பரபரப்பு புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News