பணிக்கு செல்லும் பெண்களுக்கே சிகரெட் பழக்கம் அதிகம் -ஆய்வில் தகவல்!

வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகம் சிகரெட் குடிக்கின்றனர் என தற்போது நடத்திய ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது! 

Last Updated : Mar 25, 2018, 02:18 PM IST
பணிக்கு செல்லும் பெண்களுக்கே சிகரெட் பழக்கம் அதிகம் -ஆய்வில் தகவல்! title=

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக சமூக மேம்பாட்டு‌ அறக்கட்டளை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்னதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினாலும் புகை பிடிக்கும் பழக்கம் இளம்பருவத்தினர் இடையே அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இதைவிட பெரிய அதிர்ச்சி என்ன என்றால் இதில் ஆண்களை விட பெரும்பாலன பெண்களும் இப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் புகைப்பழக்கத்தினால் சுமார் 9,32,600 இந்தியர்கள் பலியாவதாகவும், ஒரு வாரத்திற்கு 17,887 பேர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள் என்றும் இந்த டொபாக்கோ அட்லஸ் தகவலைத் தயாரித்த அமெரிக்க புற்றுநோய் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமின்றி சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற மாபெருநகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களிடம் புகைப்பழக்கம் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அசோச்சாம் சமூக மேம்பாட்டு‌ அறக்கட்டளை, அகமதாபாத், பெங்களுரு, சென்னை, டெல்லி,‌ ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களில் 2 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு 22 முதல் 33 வயதுக்குட்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவில், 40 சதவிகித பெண்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும், 2 சதவிகிதம் பேர் புகைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. 12 சதவிகித பெண்கள் நாளொன்றுக்கு 2 அல்லது 3 சிகரெட் பிடிப்பவர்கள் என்று ஆய்வு கூறுகிறது.

இந்த பழக்கத்திற்கு என்ன காரணம்....! 

இவ்வாறு புகைப்பிடிப்பதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யும் போது மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றால் புகைப்பழக்கத்தை மேற்கொண்டதாகவும் ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் கூறியுள்ளனர். 

புகை பழக்கத்தை மாற்ற மருத்துவரின் ஆலோசனை....! 

இது பற்றி மனநல மருத்துவர் கூறுகையில் உடற்கட்டுப்பாடு, நல்ல நண்பர்கள் சேர்க்கை இருப்பின் புகைப்பழக்கத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக வெளிவர முடியும் என தெரிவித்தனர். 

ஆய்வின் முடிவில் வந்த தகவல்...! 

முன்னதாக குளோபல் டொபாக்கோ அட்லஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி 10 - 14 வயதுக்குட்பட்ட 6.25 லட்சம் குழந்தைகள் புகை பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக வெளிவந்த தகவல் மிகவும் அதிர்ச்சி அடைய செய்கிறது. 

Trending News