பெரியார் சிலை குறித்து H. ராஜா கருத்துக்கு: ஜெயக்குமார் எச்சரிக்கை!

பெரியார் சிலையை உடைப்போம் என்கிற எச்.ராஜாவின் பேச்சை ஏற்க முடியாது என சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்

Last Updated : Mar 7, 2018, 02:19 PM IST
பெரியார் சிலை குறித்து H. ராஜா கருத்துக்கு: ஜெயக்குமார் எச்சரிக்கை!  title=

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 'ஹெச்.ராஜா வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியுள்ளார். அவரைக் கைதுசெய்ய வேண்டும்' என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கு மு.க.ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் எச்.ராஜாவின் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார், பெரியார் குறித்த கருத்தை எச்.ராஜா வாபஸ் பெற்றுவிட்டதால் பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். அமைதியை குலைக்கும் கருத்துக்களை எச்.ராஜா தெரிவிக்கக் கூடாது என கண்டிப்புடன் அமைச்சர் கூறியுள்ளார்.

இது பெரியார் மண், புரட்சித்தலைவர் மண். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கக்கூடாது. அமைதியை சீர்குலைப்பவர்கள் ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார். 

Trending News