மாநில அரசு சேனலுக்கு தடை - எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்... மநீம கோரிக்கை

மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 22, 2022, 07:40 PM IST
  • மாநில அரசு சேனல் நடத்த மத்திய அரசு தடை
  • பலரும் இதற்கு கண்டனம்
  • தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தல்
மாநில அரசு சேனலுக்கு தடை - எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்... மநீம கோரிக்கை title=

அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கல்வித் தொலைக்காட்சி கடந்த அதிமுக அரசில் அதாவது 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கான பாடம் ஒளிபரப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் கற்றல் தொடர்பான நிகழ்ச்சிகளும் அதில் ஒளிபரப்பாகின்றன. இதனால் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தடை இன்றி நடத்தியது. 

அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி அத்தியாவசியமாக இருந்தது. இதனை மேம்படுத்துவதற்கு தற்போது திமுக அரசும் முனைப்பு காட்டுகிறது. அரசியல் காழ்ப்புகள் இன்றி மாணவர்களின் நலனில் அதிமுகவும், திமுகவும் செயல்படுவதாக பலர் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தனியாக தொலைக்காட்சிகளை ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகள் விடுமுறையா? அமைச்சர் சொல்வது என்ன

இந்நிலையில் மாநில அரசுகள் சேனல் நடத்த மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காலம் காலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று மக்கள் நீதி மய்யம் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகிறது. மாநில சுயாட்சி மட்டுமின்றி அதற்கு அடுத்த நிலையாக கிராமங்களுக்கு உள்ளாட்சியில் தன்னாட்சி வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு இப்போது தொலைக்காட்சி நடத்தும் அதிகாரம் தனக்கு கீழ்வரும் பிரச்சார் பாரதி நிறுவனத்துக்கே உண்டு என்று அறிவித்திருக்கிறது.

இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதால் மக்கள் நீதி மய்யம் இதை வன்மையாக கண்டிக்கிறது. இதனால் ஏற்கெனவே மாநில அரசால் நடத்தப்படும் கல்வித் தொலைக்காட்சி தடைபடும் ஆபத்து இருப்பதை மக்கள் நீதி மய்யம் கவலையோடு பார்க்கிறது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொலைக்காட்சி நடத்த அதிகாரம் இருக்கும் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு அந்த அதிகாரம் இல்லை என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும். மாநில அரசு என்பது மத்திய அரசை அண்டி வாழும் அரசாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை உடனடியாக மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இதை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் நம் தமிழக அரசு தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இந்த அரசு இருக்கும் அதிகாரங்களையும் பறிகொடுத்துவிட்டு ஏமாந்து நிற்ககூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News