ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்த டொனால்ட் டிரம்ப்; இந்தியாவை குழுவில் சேர்க்க வேண்டும்

ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்திவைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா பிற நாடுகளும் இந்தக் குழுவில் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2020, 09:45 AM IST
ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்த டொனால்ட் டிரம்ப்; இந்தியாவை குழுவில் சேர்க்க வேண்டும் title=

அமெரிக்கா: ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்தி வைத்தது குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், உலகில் என்ன நடக்கிறது என்பதை ஜி-7 கூட்டமைப்பு சரியாக பிரதிபலிக்கவில்லை என நான் உணர்கிறேன். அதனால் இந்த உச்சி மாநாட்டை ஒத்தி வைக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். 

ஜி-7 நாடுகளைத் தவிர பிற நாடுகளையும் கூடுதலாக அழைக்கும் ட்ரம்பின் விருப்பமானது, ஜி-7 கூட்டமைப்பை நிரந்தரமாக விரிவு படுத்துவதற்கான முயற்சியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
ஜி-7 உச்சிமாநாட்டை அடுத்த மாதத்திற்கு பதிலாக செப்டம்பரிலோ அல்லது அதற்கு பிறகோ நடத்தப்போவதாகவும், சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் இந்தியாவை இணைத்து விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் இருந்து வாஷிங்டனுக்கு திரும்பியபோது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உலகின் மிக முன்னேறிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அதன் தற்போதைய வடிவத்தில் "மிகவும் பழமையான நாடுகளின் குழு" என்று கூறினார்.

"எனவே, ஜி 7 கூட்டமைப்பு, தற்போது உலகில் நடப்பதை சரியாக பிரதிபலிப்பதாக நான் உணரவில்லை. எனவே, தற்போது திட்டமிடப்பட்டிருந்த ஜி 7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை ஒத்திவைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார். சிறப்பு விருந்தினர்களாக கூடுதல் நாடுகளை அழைக்கும் ட்ரம்பின் விருப்பமானது, ஜி-7 ஐ நிரந்தரமாக விரிவுபடுத்துவதற்கான முயற்சியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மாஸ்கோ உலக அளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட நாடு என இதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ள டிரம்ப், ஜி-7 கூட்டமைப்பில் ரஷ்யாவைச் சேர்க்குமாறும் பரிந்துரைத்துள்ளார். ஜி-7 உச்சிமாநாட்டில் சீனாவைப் பற்றி அனைத்து நாடுகளும் விவாதிக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அலிசா பரா கூறினார்.
 
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை, அந்நாடு கையாண்டது தொடர்பாக பெய்ஜிங்கைத் தாக்கிப் பேசிய டிரம்ப், புதிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை ஹாங்காங் மீது சுமத்த சீனா எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். சீனாவிற்கு தக்க பாடம் புகட்டும் விதமாக அமெரிக்காவின் சிறப்பு சிகிச்சையை கொடுத்து, பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் பணியைத் தொடங்குமாறு தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. 

ஐரோப்பிய ஒன்றியமும் இந்த கூட்டமைப்பின் கூட்டங்களில் கலந்துகொள்கிறது. இந்த ஆண்டு நடக்க உள்ள ஜி-7 மாநாட்டை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. தற்போது, இந்த உச்சிமாநாடு ஒத்திப் போடப்பட்டிருப்பது டிரம்பிற்கு ஒரு பின்னடைவே. 1,03,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை பலி வாங்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இந்த மாநாட்டை நடத்தியிருந்தால், அது அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்பதற்கான நிரூபணமாக இருந்திருக்கும்.

மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட நேரடியான ஜி-7 மாநாட்டை, கொரோனா வைரஸின் தாக்கத்தால் ரத்து செய்திருந்த டிரம்ப், அண்மையில் மாநாட்டை நடத்த முயன்றார்.

நேரடியான கூட்டம் நடத்தும் யோசனையை பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆதரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல கேள்விகள் எழுவதாக அவர் தெரிவித்தார். இந்த உச்சிமாநாட்டில் தான் கலந்து கொள்ள முடியாது என்று ஜெர்மன் சான்ஸ்லர் ஏங்கலா மெர்க்கெல் இந்த வார தொடக்கத்திலேயே கூறிவிட்டார்.

(மொழியாக்கம்: மாலதி தமிழ்ச் செல்வன்)

Trending News