)
கடந்த மாதம் ஜூலை 30ம் தேதி வயநாட்டில் உள்ள சூரல்மாலா மற்றும் முண்டக்கையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவில் சிக்கி 400 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட சில உடல்களை அடையாளம் காண முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் நிச்சரிவு ஏற்படும் இரண்டு நாட்களுக்கு முன்பு புஞ்சிரிமட்டம், முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலா, மேப்பாடி போன்ற கிராமங்களில் தொடர்ந்து சுமார் 570 மிமீ மழை பதிவாகியுள்ளது. அந்த பகுதிகளில் அதிகம் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பலர் அங்கு வேலை பார்த்தவர்கள் தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மக்களவையில் பூஜ்ய நேரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, நிலச்சரிவில் வீடுகளையும், குடும்பத்தையும் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலச்சரிவில் சில ஊர்களுக்கு செல்ல முடியாத அளவில் சாலைகளை துண்டித்துவிட்டன. இதனால் உதவிகள் செய்வதும் தாமதம் ஆகிறது. எனவே இதற்கான தீர்வை உடனே சரி செய்ய, மேலும் வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தி உள்ளார்.
"நான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்த்தேன், அங்கு பல்வேறு இடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஒருசில குடும்பங்கள் முழுவதும் நிலச்சரிவில் இறந்துள்ளனர், ஒரு குடும்பத்தில் ஒருத்தர் மட்டுமே எஞ்சி உள்ள நிலையும் உள்ளது. அம்மா, அப்பா, தம்பி, தங்கையை இழந்துள்ளனர். இதனை தேசிய பேரிடராக அறிவித்தால் தான் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர்கள் தொடங்கி, பல நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றனர். மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா அரசுகளும் உதவிகளை செய்து வருகின்றனர்.

1 கோடி நிதி வழங்கிய SNJ குழுமம்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக SNJ குழுமம் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்டு, கடினமான காலத்தை கடந்து செல்லும் தற்போதைய சூழ்நிலையில், SNJ குழும நிறுவனங்களான நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். சிறிய அளவில் இருந்தாலும், நிலைமையை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதை உறுதிசெய்ய நாங்கள் எங்கள் உதவிக்கரம் நீட்டுகிறோம், எனவே மொத்தம் 1,00,00,000 ஒரு கோடி ரூபாய் காசோலையை கேரளாவின் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு குழும தலைவர் எஸ்.என்.ஜெயமுருகன் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் நேரடியாக வழங்கினார்" என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ